காஞ்சி பீடம் யானைகள் துன்புறுத்தல் இன்றி திருச்சி அனுப்பப்பட்டன.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்
சென்னை: தனியாரின் கட்டுப்பாட்டில் இருந்த காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 பெண் யானைகளும் எவ்வித துன்புறுத்தலுக்கும் ஆளாக்காமல் திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான சந்தியா, ஜெயந்தி, இந்துமதி ஆகிய யானைகளை முறையாக பராமரிக்கவில்லை என கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மூன்று யானைகளையும் திருச்சியில் உள்ள மறுவாழ்வு மையத்திற்கு மாற்ற செப்டம்பர் 19ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து தமிழக அரசின் வனத்துறை செயலாளர் சார்பில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சஞ்சய் ஸ்ரீவத்சவா அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
அதில், யானைகள் முழு பாதுகாப்புடனும், லாரிகளில் போதுமான உணவுகளுடனும் திருச்சிக்கு கொண்டு செல்லபட்டதாகவும், வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் கொண்டு செல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யானைகள் வாகனத்தில் ஏற்றும்போது யானைகளை துன்புறுத்தியதாக வீடியோ வெளியானது குறித்த குற்றச்சாட்டை பொறுத்தவரை, மரக்கட்டைகளை பயன்படுத்தி சத்தம் எழுப்பி யானைகளை, பாகன்கள் வழி நடத்தினரே தவிர, அங்குசம் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்கள் பிரயோகப்படுத்தவில்லை என தெரிவிக்கபட்டுள்ளது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி அமர்வு, இதுதொடர்பாக முரளிதரன் என்பவர் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications