காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் .. வடகலை தென்கலை 120 ஆண்டு சர்ச்சை.. முன்னாள் நீதிபதி இனி நடுவர்
சென்னை: காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜசுவாமி கோயிலில் (வரதராஜ பெருமாள் கோயில்) ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தின் வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே திவ்ய பிரபந்தம் (நாலாயிர திவ்ய பிரபந்தம்) பாடும் உரிமை தொடர்பான மோதல் நூற்றாண்டுகளாக நீடித்து வருகிறது.
இந்த சர்ச்சை தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்நிலையில், ஜனவரி 28, 2026 அன்று உச்ச நீதிமன்றம் முக்கிய முடிவு எடுத்துள்ளது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அவர்களை பிரதான நடுவராக நியமித்துள்ளது. இந்த முடிவு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்ட பின்னர் எடுக்கப்பட்டிருக்கிறது
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. இங்கு பூஜை, உற்சவங்கள், மந்திர புஷ்பம், பிரபந்த பாராயணம் போன்றவற்றில் வடகலை (வடக்கு - சமஸ்கிருதத்தை முக்கியமாகக் கொண்டது) மற்றும் தென்கலை (தெற்கு - தமிழ் ஆழ்வார் பாசுரங்களை முக்கியமாகக் கொண்டது) பிரிவினரிடையே உரிமை மோதல் நீண்டகாலமாக உள்ளது.

பிரச்சனை என்ன:
கோயிலின் சன்னதியில் மூலவருக்கு முன்பு யார் முதலில் பிரபந்தம் பாடுவது? தென்கலை பிரிவினர் தங்கள் பாரம்பரிய உரிமையை (ஹெரிடேட்டரி அட்யாபக மிராசி முறை) வலியுறுத்துகின்றனர். வடகலை பிரிவினர் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் (ஆர்டிக்கிள் 25) தங்கள் மத சுதந்திர உரிமை மறுக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.
முந்தைய தீர்ப்புகள்:
1915 & 1918இல் சென்னை உயர் நீதிமன்றம் தென்கலைக்கு ஆதரவாக தீர்ப்பு. 2023இல் சென்னை உயர் நீதிமன்றம் தென்கலை பிரிவின் பிரத்தியேக உரிமையை உறுதி செய்தது. ஆனால் வடகலை தரப்பு மேல்முறையீடு செய்ததால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது.
பக்தர்கள் அவதி
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உற்சவங்களின் போது (பிரம்மோற்சவம், சொர்க்கவாசல் திறப்பு, பார்வேட்டை உற்சவம் போன்றவை) பிரபந்தம் பாடுவதில் அடிக்கடி வாக்குவாதம், சண்டை, கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய அணுகுமுறை
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, இரு தரப்பு வழக்கறிஞர்களும் (வடகலை தரப்பில் சி.ஏ. சுந்தரம், குரு கிருஷ்ண குமார் உள்ளிட்டோர்) மத்தியஸ்தத்துக்கு ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த நடுவர் நியமனத்தை அறிவித்தது. நீதிபதி கவுல் (முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி) இந்த மோதலை அமைதியாக தீர்க்க முயற்சி செய்வார்.இரு பிரிவினரும் கோயில் சடங்குகளை தடையின்றி நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இதன்மூலம் நீண்டகால சர்ச்சைக்கு அமைதியான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications