சீனாவுக்கு செக்- தூத்துக்குடி துறைமுகத்தை சர்வதேச சரக்கு பெட்டக பரிமாற்ற முனையமாக்கவேண்டும்: கனிமொழி
சென்னை: இலங்கையில் முதலீடு செய்யும் சீனாவுக்கு பதிலடி தர தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை சர்வதேச சரக்குப் பெட்டக பரிமாற்ற முனையம் அமைக்க வேண்டும் என்று லோக்சபாவில் திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தினார்.
இது தொடர்பாக லோக்சபாவில் கனிமொழி பேசியதாவது:
தூத்துக்குடி துறைமுகம், பல்வேறு சர்வதேச கப்பல் போக்குவரத்தின் ஒரு முக்கிய மையமாக விளங்குகிறது. இத்தகைய சர்வதேச சரக்குப் பெட்டக பரிமாற்ற முனையமாக அமைக்க தேவையான வசதிகள் அங்கே இருக்கிறது. ஆகையால் சர்வதேச சரக்குப் பெட்டக பரிமாற்ற முனையமாக உடனடியாக அமைக்க வேண்டும்.

தூத்துக்குடி துறைமுகமானது, சர்வதேச சரக்குக் கப்பல் போக்குவரத்துகளை அதிகமாக கொண்டுள்ளது. இந்த துறைமுகத்தில் சர்வதேச சரக்குப் பெட்டக பரிமாற்ற முனையம் அமைப்பது இலங்கையில் முதலீடுகளை அதிகரித்து வரும் சீனாவுக்கு பதிலடியாக அமையும்.
தற்போது, இந்திய சரக்குப் பெட்டகங்களில் 60 சதவிகிதத்துக்கும் மேல் கொழும்பில் பரிவர்த்தனை செய்து வருகின்றன. இதன் காரணமாக, நமது ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் ஒவ்வொரு சரக்குப் பெட்டகத்துக்கும் கூடுதல் தொகை செலுத்த வேண்டியுள்ளது. இதன் காரணமாக ஏற்றுமதி இறக்குமதியில் இந்தியா பின்தங்குவதோடு அல்லாமல், அந்நிய செலாவணி கூடுதலாக வெளியே செல்வதற்கும் வழிவகுக்கிறது.
இத்தகைய சர்வதேச சரக்குப் பெட்டக பரிமாற்ற முனையம் அமைப்பது, சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த ஒரு ஊக்கமாக அமைவதோடு, கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள சரக்குப் பெட்டக பரிவர்த்தனை மையங்களை பயன்படுத்தாமல், கப்பல்கள் தூத்துக்குடி துறைமுக சரக்கு பெட்டக பரிமாற்ற முனையத்தை பயன்படுத்த உத்வேகம் அளிக்கும்.
இத்தகைய வசதி மேற்கொள்ளப்பட்டால், கப்பல்கள் இலங்கையை சுற்றிச் செல்லாமல் தூத்துக்குடி துறைமுகத்தை பயன்படுத்திக் கொள்ள வசதி ஏற்படுத்தும். இவ்வாறு கனிமொழி எம்.பி. வலியுறுத்தினார்












Click it and Unblock the Notifications