"நயன்தாரா வேண்டும்" சி.வி.சண்முகத்தின் பேச்சு அருவருக்கத்தக்கது! கனிமொழி, ஜோதிமணி கண்டனம்
சென்னை: நடிகை நயன்தாரா குறித்து மாநிலங்களவை எம்பியும், அதிமுக முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் இழிவாக பேசியதற்கு திமுக எம்பி கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். அது போல் ஜோதிமணி எம்பியும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலை தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அரசியல் நாகரிகமோ, அடிப்படை அறமோ அதிமுகவினருக்கு என்றும் இருந்ததில்லை. அதனால், பெண்களை இழிவு படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் தனது கட்சியைச் சார்ந்த இந்த நபரின் அருவருக்கத்தக்கப் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்ப்பது வீண். இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கரூர் காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி கூறியிருப்பதாவது: அதிமுகவின் திரு. சி. வி. சண்முகம் திருமிகு. நயன்தாரா அவர்கள் குறித்துப் பொதுவெளியில் பேசிய பேச்சு கடுமையான கண்டனத்திற்குரியது.
ஒரு பெண்ணை பொதுவெளியில் இப்படி அப்பட்டமாக ,ஆபாசமாகப் பேசுவதை நாம் இயல்பாகக் கடந்து போய்விட முடியாது. திரைத்துறையில் ஒரு வெற்றிகரமான பெண், இன்னொருவரின் மனைவி, இரண்டு குழந்தைகளின் தாய் பல்வேறு போராட்டங்களைக் கடந்து,தொடர்ந்து பயணிக்கும் ஒரு பெண்ணை மிகவும் மோசமான பார்வையோடு அணுகுவது,பேசுவது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. சட்டப்படியும் தவறு.
அரசியல் மேடைகளில் பெண்களை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்கிற மனநிலை ஆபாசமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட. பல்வேறு தடைகளை,போராட்டங்களைக் கடந்து தான் சார்ந்த துறைகளில் வெற்றிகரமாகப் பயணிக்கும் பெண்களை மீண்டும் மீண்டும் உடலாக மட்டுமே பார்க்கும், அவமதிக்கும் மனநிலையை நாம் ஒரு சமூகமாக கேள்விக்கு உட்படுத்த வேண்டும்.
அப்பொழுதுதான் பெண்கள் பொதுவெளியில் பாதுகாப்பாகவும்,கண்ணியமாகவும் உணர முடியும்.திரு. சி.வி சண்முகம் தனது பேச்சுக்கு உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும். காவல்துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் என்டிஏ கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அது போல் மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டணி கட்சியினருடன் கலந்து கொண்டனர்.
அப்போது விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், அப்துல் கலாம் கனவுக் காண சொன்னார். முதல்வர் ஸ்டாலின் அதைவிட ஒரு படி மேலேச் சென்று உங்கள் கனவை சொல்லுங்கள், நான் நிறைவேற்றுகிறேன் என சொல்கிறார்.
ஆமாம், எனக்கு நயன்தாரா வேண்டும், என் கனவை நிறைவேற்றுவாரா? நயன்தாராவை திருமணம் செய்து வையுங்கள் என யாராவது கேட்பார்கள், அதை நிறைவேற்றுவாரா என பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.
அவரது பேச்சு தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும் எந்தவிதமான தவறான நோக்கத்துடனும் இப்படி கூறவில்லை. இதனால் ஏற்பட்ட தவறுக்கு மனமார்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications