திமுக நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழி நியமனம்! டிஆர் பாலுவுக்கு முக்கிய பொறுப்பு- ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக போட்டியிட்ட 22 தொகுதிகளிலும் வென்ற நிலையில், திமுக நாடாளுமன்ற குழு தலைவராகக் கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுக கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி அசத்தியது.

கடந்த முறை திமுக கூட்டணி தேனியைத் தவிர்த்து 39 தொகுதிகளில் வென்றிருந்த நிலையில், இந்த முறை 40 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களாக வெற்றி பெற்றனர்.
திமுக கூட்டணி: குறிப்பாகத் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் 22 பேர் போட்டியிட்டனர். திமுகவினர் 21 பேரும், கொமதேகவில் ஒருவரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், இந்த 22 பேரும் வெற்றி பெற்றனர். இதற்கிடையே திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. அதில் நீட் விலக்கு உள்ளிட்ட 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கனிமொழி: இதற்கிடையே இன்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் திமுக நாடாளுமன்ற குழு தலைவராகக் கனிமொழி நியமிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல திமுக மக்களவை குழு தலைவராக டிஆர் பாலு, திமுக மக்களவை குழு துணைத் தலைவராகத் தயாநிதி மாறன், திமுக மக்களவை கொறடாவாக ஆ ராசா நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மக்களவை - மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்ந்து கழக நாடாளுமன்றத்தின் குழுத் தலைவராகத் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, எம்.பி, மக்களைவைக் குழுத் தலைவராகக் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி நியமிக்கப்படுகிறார்கள்.
ஆ ராசா: மக்களைவைக் குழுத் துணைத் தலைவராகக் கழக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன், எம்.பி, மக்களைவை கொறடாவாகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ. இராசா, எம்.பி, மாநிலங்களவைக் குழுத் தலைவராகக் கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, எம்.பி., மாநிலங்களவைக் குழுத் துணைத் தலைவராக தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம்,எம்.பி நியமிக்கப்படுகிறார்கள்.
மாநிலங்களவை கொறடாவாகத் தலைமைக் கழக சட்ட தலைமை ஆலோசகர் வழக்கறிஞர் பி.வில்சன், எம்.பி, இரு அவைகளின் பொருளாளராகக் கொள்கைப் பரப்பு செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி நியமிக்கப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications