நவீன மொழிப்போர்... இந்தி எதிர்ப்பில் சளைக்காத இந்த தலைமுறை... உதயநிதி டீ ஷர்ட்... கனிமொழி பாராட்டு !
சென்னை: இந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டீ-ஷர்ட் தமிழக இளைஞர்கள் மத்தியில் டிரெண்ட் ஆகி வரும் நிலையில் இது ஒரு நவீன மொழிப்போராக கருதப்படுகிறது.
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 'இந்தி தெரியாது போடா' என்ற வாசகம் தாங்கிய டீ-ஷர்ட் அணிந்து காணொலி மூலம் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
இதனிடையே இந்திக்கு எதிரான ஒரு சிறிய தீப்பொறி இப்போது காட்டுத்தீயாக மாறி உள்ளதாக திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி. தெரிவித்திருக்கிறார்.

மொழி திணிப்பு
தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக திமுக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில் அப்போதெல்லாம் இளைஞர்கள் மத்தியில் ஏற்படாத ஒரு எழுச்சியும், கவனஈர்ப்பும் இப்போது இந்தி தெரியாது போடா என்ற வாசகம் தாங்கிய டீ-ஷர்ட் மூலம் ஏற்பட்டுள்ளது.

இந்த தலைமுறை
இந்தி தெரியாது போடா என்ற வாசகத்துடன் கூடிய சட்டையை அணிந்தவாறு திரைப்பட நடிகர் ஷிரீஷ் திமுக எம்.பி. கனிமொழியை சந்தித்து பேசியுள்ளார். யுவன் சங்கர் ராஜாவுடன் சிவப்பு நிற சட்டை அணிந்து நின்ற நடிகர் ஷிரீஷை பாராட்டிய கனிமொழி அவரது நண்பர்களையும் சந்தித்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், இந்த தலைமுறையும் இந்தி எதிர்ப்பில் சளைத்தவர்கள் அல்ல என்பதை இது போன்ற நிகழ்வுகள் உணர்த்துவதாக கனிமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

செந்தில் வலியுறுத்தல்
இதனிடையே திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் நிர்வாகிகள் சந்திப்பை நடத்திய போது இந்தி தெரியாது போடா என்ற டீ-ஷர்ட் அணிந்தவாறு கலந்துகொண்டார். அப்போது அவரிடம் பேசிய தருமபுரி எம்.பி.செந்தில்குமார், உங்கள் சட்டையில் எழுதப்பட்டுள்ள வாசகத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது அதில் என்ன உள்ளது என்பதை நீங்களே படித்துக்காட்டினால் நன்றாக இருக்கும் என கோரிக்கை விடுத்தார்.

நிகழ்ச்சி தொடக்கம்
அதைக் கேட்ட உதயநிதி ஸ்டாலின், இந்தி தெரியாது போடா என டீ-ஷர்டில் இடம்பெற்ற வாசகத்தை கூறி தனது உரையை தொடங்கினார். இந்தி மொழி திணிப்புக்கு எதிரான சட்டைகளை அணிவதில் இளைஞர்கள் பெருமளவில் ஆர்வமும் ஆதரவும் அளிப்பது மகிழ்ச்சியளிப்பதாக திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

பெருகும் ஆதரவு
இந்திமொழி திணிப்பு தொடர்பாக இது வரை அரசியல் கட்சியினர் மட்டுமே எதிர்ப்பு குரல் கொடுத்து வந்த நிலையில் இப்போது திரைத்துறையினரும் மொழி திணிப்புக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கீர்த்தி ஆகியோர் 'இந்தி தெரியாது போடா' மற்றும் 'ஐ ஆம் எ தமிழ் பேசும் இந்தியன்' என்ற வாசகங்கள் தாங்கிய சட்டைகளை அணிந்து அந்த படத்தை வெளியிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications