அதிமுகவை திராவிட இயக்கமாக கருத முடியாது! குலக்கல்வித் திட்டத்தை திணிக்க முயற்சி! கடுகடுத்த கனிமொழி!
சென்னை: அதிமுகவை திராவிட இயக்கமாகவே கருத முடியாது எனக் கூறியிருக்கிறார் திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி.
புதியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு மீண்டும் குலக் கல்வித் திட்டத்தை கொண்டு வர முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், வேளாண் திருத்தச் சட்டம், குடியுரிமைச் சட்டம் கொண்டு வந்த போது அதனை திமுக தான் கடுமையாக எதிர்த்ததாகவும் அதிமுக வாயை மூடிக் கொண்டு இருந்ததாகவும் கனிமொழி விமர்சித்துள்ளார்.
திமுக பொதுக்கூட்டம்
சென்னை மயிலாப்பூரில் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு ஏற்பாட்டில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், மக்களை பற்றி எந்த கவலையும் படாத ஒரு கட்சி அதிமுக என்றும் கட்சியில் யார் பெரியவர் என்பதே அந்தக் கட்சியினரின் கவலை எனவும் கூறினார். மேலும், அதிமுகவை திராவிட இயக்கம் என்று கருத முடியாது என்றும் திராவிட இயக்க கோட்பாடுகளின் அடிப்படையில் அக்கட்சி செயல்படவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.
போராட்டம் இல்லை
இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா கொண்டுவரப்பட்ட போதும் சரி, விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டம் கொண்டுவரப்பட்ட போதும் சரி திமுக மட்டுமே அதை கடுமையாக எதிர்த்து போராட்டங்கள் நடத்தியது என்றும் அதிமுகவை பொறுத்தவரை இந்த இரண்டு விவகாரங்களிலும் வாய்மூடி மவுனியாக நின்று வேடிக்கை மட்டுமே பார்த்தது எனவும் கனிமொழி சாடியிருக்கிறார். இந்த விவகாரத்தில் ஒரு போராட்டம் கூட நடத்தாத கட்சி அதிமுக என அவர் சாடியுள்ளார்.
திமுக அரசு
மேலும் திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசிய கனிமொழி எம்.பி. மக்கள் நலத் திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார். இதனிடையே இவருக்கு முன்னதாக பேசிய சுப.வீரபாண்டியன், முதல்வர் ஸ்டாலினை ஹெச்.ராஜா முன்பு ஆபத்தானவர் என்று சொல்லிவிட்டு நேற்று முன் தினம் அப்பாவி என்று கூறியிருப்பதாகவும், தன்னை பொறுத்தவரை முதல்வர் ஸ்டாலின் ஆபத்தானவரும் இல்லை,அப்பாவியும் இல்லை, அவர் நிதானமானவர், நேர்மையானவர், நெஞ்சுரமிக்கவர் எனத் தெரிவித்தார்.
கூட்டம் முடிந்தது
திமுக பொதுக்கூட்டம் முடிந்து மேடையிலிருந்து கீழே இறங்க முயன்ற போது கட்சியினர் தனக்கு பொன்னாடை கொடுப்பதற்காக காத்திருப்பதை பார்த்த கனிமொழி, சுமார் 10 நிமிடங்கள் நின்று கட்சியினரிடம் இருந்து பொன்னாடைகளையும், புத்தகங்களையும் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.