நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்... கனிமொழிக்கு வந்த போன் கால்... இரவோடு இரவாக மீட்புப்பணி..!
சென்னை: நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவர்களை தனது துரித நடவடிக்கையால் பாதுகாப்பாக மீட்டுள்ளார் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.
மீனவர்கள் கடலில் தத்தளிப்பது குறித்து தனக்கு கிடைத்த தகவலை அடுத்து, இரவு நேரம் என்று கூட பாராமல் உடனடியாக உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளார்.
மீட்பு விவகாரத்தில் கொஞ்சம் தாமத்திருந்தாலும் கடலில் படகு மூழ்கி 9 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கக் கூடும்.

தூத்துக்குடி
கடந்த சனிக்கிழமையன்று தூத்துக்குடியில் இருந்து 'அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய வென்னிலா' என்ற படகில் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒன்பது மீனவர்கள் மாலத்தீவை நோக்கி சென்றுள்ளனர். அவர்கள் கன்னியாகுமரியில் இருந்து சுமார் 130 நாட்டிகல் மைல் தூரத்தில் சென்ற போது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக படகு மூழ்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

அலைபேசி மூலம்
உடனடியாக அப்படகில் இருந்த அவசரநிலை தொலைத் தொடர்பு சாதனம் மூலம் நேற்றிரவு 'சென்னை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு' தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து அந்தப் படகின் உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அதில் பயணித்த ஒன்பது மீனவர்கள் குடும்பத்தினர், கனிமொழி எம்.பி.யை அலைபேசி மூலம் அழைத்து கண்ணீருடன் நடந்த விவரத்தை கூறியிருக்கின்றனர்.

தைரியம் அளித்து
அவர்களுக்கு தைரியம் அளித்து காப்பாற்றிவிடலாம் கவலைப்படாதீர் என ஆறுதல் வார்த்தை கூறிய கனிமொழி, நடு இரவு என்று கூட பார்க்காமல் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக மீட்பு பணிகளை தொடங்க வேண்டும் என அழுத்தம் கொடுத்திருக்கிறார். இதையடுத்து இரவோடு இரவாக மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

மாலத்தீவு கப்பல்
மாலத்தீவை நோக்கி சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று தூத்துக்குடி மீனவர்கள் சென்ற படகிற்கு சற்று தூரத்தில் இருப்பதை சற்று நேரத்தில் கண்டறிந்து அக்கப்பலுக்கு கடற்படை தொலைத்தொடர்பு கருவிகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கப்பல் மூலம் ஒன்பது மீனவர்களும் மீட்கப்பட்டு மாலத்தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி
இதனிடையே ஒரு பெண்ணாக இருந்தும், இரவு முழுவதும் மீனவர்கள் மீட்பு பணியில் தனிக்கவனம் செலுத்தி 9 உயிர்களை பாதுகாத்துக் கொடுத்ததற்காக விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கனிமொழி எம்.பி.க்கு நன்றி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications