எப்படி நீங்கல்லாம் அதிகாரிகளாக இருக்கிறீர்கள்? தமிழ்த்தாய் வாழ்த்து விஷயத்தில் கனிமொழி நறுக் கேள்வி
சென்னை: தமிழக அரசின் அரசாணையை பற்றிக் கூட தெரிந்துகொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாக பணியாற்ற முடியும் என ரிசர்வ் வங்கி அதிகாரிகளை வெளுத்து வாங்கியிருக்கிறார் கனிமொழி எம்.பி.
தமிழக அரசை விட ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மேம்பட்டவர்களா என கனிமொழி எம்.பி. சாடியிருக்கிறார்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்து ஒன்றரை மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், அது குறித்த அடிப்படை தகவல் கூட அறியாமல் ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் வாக்குவாதம் செய்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு
'நீராரும் கடலுடுத்த' என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழக அரசின் மாநிலப் பாடலாக அறிவித்ததுடன் இந்தப் பாடல் பாடப்படும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என கடந்த டிசம்பர் மாதம் 17-ம் தேதி அரசாணையே வெளியிட்டது தமிழக அரசு. மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் தெள்ளத்தெளிவாக தமிழக அரசு தமது செய்திக்குறிப்பில் சுட்டிக்காட்டி இருக்கிறது.

ரிசர்வ் வங்கி
இந்நிலையில் இது குறித்து எதுவும் அறியாமல் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்து பிடிவாதம் பிடித்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்கள் சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள். எல்லாம் தெரிந்தது போல் செய்தியாளர்களிடம் ஹீரோயிசம் காட்டிய ரிசர்வ் வங்கி அதிகாரியை அவரது சகப் பணியாளர்கள் ஆஃப் செய்து அழைத்துப் போய் விவரத்தை எடுத்துக்கூறினர். இந்த நிகழ்வு தமிழகம் தழுவிய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருப்பதோடு தமிழ் உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

கனிமொழி எதிர்ப்பு
இதனிடையே ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு தனது டிவிட்டர் பதிவு மூலம் நறுக் கேள்வி எழுப்பியிருக்கிறார் கனிமொழி எம்.பி. அதில், ''ஒரு அரசாணையை கூட தெரிந்துகொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்? இல்லை இவர்கள் தமிழக அரசை விட மேம்பட்டவர்களா? என கோபம் கொப்பளிக்க பதிவிட்டிருக்கிறார்.
Recommended Video

செய்தியறிவு
அரசுப் பணியில் இருந்துகொண்டு அரசாங்கம் வெளியிட்ட அரசாணையை பற்றி எதுவும் தெரியாது என ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. அன்றாடம் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிய செய்தியறிவு அவசியம் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications