உங்க பையனுக்கு கல்யாணம்னு சொன்னீங்க! கரெக்டா வந்துடுவேன்! தப்பாட்டம் கலைஞர் வேலுவிடம் கனிமொழி உறுதி!
சென்னை: நாட்டுப்புற கலைஞர்களுடன் இன்று பொங்கல் கொண்டாடிய கனிமொழி எம்.பி., தப்பாட்டம் கலைஞர் வேலுவை தனது ஞாபகசக்தியால் திக்குமுக்காட வைத்தார்.
''உங்க பையனுக்கு இந்த மாசம் கல்யாணம் என்று சொன்னீங்க, கவலைப்படாதீங்க நான் கரெக்டா வந்துவிடுவேன்'' எனக் கூறி தப்பாட்ட கலைஞர் வேலுவை நெகிழ வைத்தார்.
கனிமொழி எம்.பி. இந்தளவுக்கு ஞாபக சக்தியோடு இருப்பார் என்பதை எதிர்பார்க்காத நாட்டுப்புற கலைஞர்கள் வியந்து போனார்கள்.
'அமைதியான முதல்வரை கோபப்பட வைத்துவிட்டார்கள்'! நாட்டுப்புறக் கலைஞர்களுடன் கனிமொழி கொண்டாடிய பொங்கல்
சொந்த நிதி
சென்னை சங்கமம் -நம்ம ஊரு திவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் நாட்டுப்புற கலைஞர்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடிய கனிமொழி எம்.பி., தனது சொந்த நிதியின் மூலம் அவர்களுக்கு புத்தாடைகளும் பொங்கல் பரிசுகளும் வாங்கிக் கொடுத்தார். அப்போது 12 ஆண்டுகளுக்கு முன்னர் 2011 -ல் நடைபெற்ற சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பல கலைஞர்களை அடையாளம் கண்டு உரிமையுடன் பெயரைச் சொல்லி அழைத்து அவர்களை அசர வைத்தார்.
கரெக்டாக வருவேன்
அதுமட்டுமல்லாமல் உங்க பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், என்ன படிக்கிறார்கள் என்பது வரை மிகுந்த அக்கறையுடன் கேட்டறிந்தார். மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக தப்பாட்டம் கலைஞர் வேலுவை பார்த்தவுடன், ''என்ன வேலு, உங்க பையனுக்கு இந்த மாசம் கல்யாணம் என்று சொன்னீங்க, கவலைப்படாதீங்க நான் கரெக்டா வந்துவிடுவேன்'' எனக் கூறி தனது ஞாபகசக்தியை வெளிப்படுத்தினார். கனிமொழி இந்தளவுக்கு நினைவு கூர்ந்து பேசுவார் என்பதை எதிர்பார்க்காத வேலு நெகிழ்ந்துவிட்டார்.
கனிமொழி ஞாபகசக்தி
தப்பாட்டம் கலைஞர் வேலுவை பொறுத்தவரை அவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் ஓரிரு மாதங்களுக்கு முன்பாக கனிமொழியை சந்தித்து தனது மகன் திருமணம் குறித்து தெரிவித்துச் சென்றதும் குறிப்பிடத்தக்கது. அதனை மறக்காமல் ஞாபகத்தில் வைத்திருந்த கனிமொழியை கண்டு அவர் கண்கலங்கி விட்டார். 5 நாள் கலை விழாவில் மூன்று நாட்கள் நிறைவடைந்த நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு நாட்டுப்புற கலைஞர்கள் சென்னையில் இருப்பார்கள்.
பார்த்து பார்த்து
சென்னை சங்கமம் -நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள் நடத்தும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு தேவையான வசதிகளை சென்னையில் பார்த்து பார்த்துச் செய்து கொடுத்து வருகிறார் கனிமொழி. குறிப்பாக அவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக இருக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார்.