தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்
சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இப்படி இருக்கையில், இன்று தொடங்கப்பட இருந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டமும் தள்ளி போயிருக்கிறது. இதை குறிப்பிட்டு திமுக எம்பி கனிமொழி, சட்டம் ஒழுங்கு பிரச்சனையின் தீவிரத்தை தவெக அரசு எப்போது உணரும்? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்பது பெரிய தலைவலியாகத்தான் நீடிக்கிறது. அதிமுக ஆட்சிக்காலத்திலும் சரி, திமுக இருந்தபோதும் சரி.. சட்டம் ஒழுங்கு குறித்து அரசு மீது தொடர் விமர்சனங்கள் இருந்த வந்திருக்கின்றன.

தீர்வு கிடைக்கவில்லை
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும், சட்டமன்ற தேர்தலின்போது இந்த விமர்சனங்களை திமுக அரசு மீது அடுக்கியிருந்தார். இப்போது விஜய் முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார். இருப்பினும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை, கோவை சிறுமி கொலை, சென்னையில் சிறுவனுக்கு தலைமை காவலரே பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது என, அடுத்தடுத்த சம்பவங்கள் தமிழ்நாட்டை அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைப்பிரிவை முதலமைச்சர் விஜய் உருவாக்கியிருந்தார். இந்த படையினர் பள்ளிகள், கல்லூரிகள், ஐடி பார்க்குகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்காணித்து உடனடியாக தடுப்பதுதான் இவர்களின் வேலை.
தனி சீருடை
இந்த படைப்பிரிவினருக்கு என தனியாக சீருடையும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இப்படியாக இந்த படை மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றிருந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க இருந்தார். சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தொடக்க விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. காவலர்கள் இந்த நிகழ்ச்சிக்காக சிறப்பு ஒத்திகை பார்த்திருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
நிகழ்ச்சி ரத்து
சிறப்பு அதிரடிப்படை திட்டம் தொடங்காமல் தொங்கலில் விடப்பட்டிருப்பது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக எம்பி கனிமொழி, தனது x பக்கத்தில், "கடலூரில் இளம் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட செய்தி, தூத்துக்குடியில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி என தமிழ்நாட்டில் அடுத்தடுத்து வேதனை அளிக்கும் குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
பிரச்சனையின் தீவிரத்தை உணருமா அரசு?
தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளின் தீவிரத்தை உணர்ந்து எப்போது செயல்படப் போகிறது, தவெக அரசு? மகளிர் பாதுகாப்புக்காக இன்று தொடங்கப்படும் என்று அறிவித்திருந்த 'சிறப்பு அதிரடிப்படை' திட்டத்தை நிறுத்திவைத்துள்ளது ஏன்? தொடரும் இந்தக் குற்றச் சம்பங்களைத் தடுக்க என்ன செய்யப்போகிறது, இந்த அரசு?" என கேள்வி எழுப்பியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications