கனிமொழி எப்போது வரப் போகிறார்.. பிரச்சாரத்தை எதிர்நோக்கி பெரும் எதிர்பார்ப்பில் வேலூர் திமுக!
Recommended Video
சென்னை: வேலூர் லோக்சபா தொகுதியில் மகளிர் அணி செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி எப்போது பிரசாரம் மேற்கொள்வார் என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் திமுக தொண்டர்கள்.
திமுகவில் கனிமொழி மீது மகளைப் போல பாசம் காட்டுபவர் துரைமுருகன். கனிமொழிக்கு மிகவும் ஆதரவானவரும் கூட துரைமுருகன்.
வேலூர் லோக்சபா தொகுதியில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவதால் பிரசாரத்துக்கு செல்ல வேண்டும் என ஆர்வத்துடன் இருக்கிறார் கனிமொழி. ஆனால் லோக்சபாவில் அடுத்தடுத்து மசோதாக்களை கொண்டு வந்து யானை புகுந்த நிலம் போல விளையாடிக் கொண்டிருக்கிறது பாஜக.
வேலூரில் திமுக பிரசாரம்
இதனால் பாஜகவுடன் மல்லுக்கட்டவே கனிமொழி உள்ளிட்ட திமுக எம்.பிக்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. இந்த நிலையில் வேலூர் தொகுதியில் திமுகவின் பிரசாரம் களைகட்டிக் கொண்டிருக்கிறது.
திமுக- அதிமுக திருவிழா
ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளும் வேலூர் தொகுதியை முற்றுகையிட்டு தெருத்தெருவாக பிரசாரம் செய்து வருகின்றனர். இதற்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை போல அதிமுகவினரும் தமிழ்நாடு முழுவதும் இருந்து வேலூரில் களமிறக்கப்பட்டனர்.
எப்போது வருவார் கனிமொழி
இப்படி பிரசாரம் படுஉச்சத்தை எட்டியிருக்கிறது. இந்த நிலையில் கருணாநிதியின் மகளும் திமுக எம்.பி.யுமான கனிமொழி இன்னமும் பிரசாரத்துக்கு வரவில்லையே என்கிற ஏக்கம் அக்கட்சி தொண்டர்களிடையே வெளிப்படுகிறது.
கனிமொழி வந்தால் பலமே
இது தொடர்பாக நம்மிடம் பேசிய திமுக தொண்டர்கள், அக்காவும் பிரசாரத்துக்கு வரவேண்டும் என விரும்புகிறோம். ஒட்டுமொத்தமாக தலைவர் குடும்பமே களத்தில் இறங்கி நிற்கும்போது அதற்கான பலமே வேற.. வாக்காளர்கள் மத்தியில் பெரும் அனுதாபமும் ஏற்படும் என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு என்கின்றனர்.
கனிமொழியை ஓரம்கட்டுகின்றனரா?
அதே நேரத்தில் எப்போது அவரை அழைத்தாலும் வேலூர் பிரசாரத்துக்கு செல்ல தயாராக இருப்பதாகவும் லோக்சபா பணிகளை காட்டியே அவரை சிலர் ஓரம்கட்டிவிடலாம் என முயற்சிப்பதாகவும் அறிவாலயத்தில் இருந்து அதிருப்தி குரல்களும் வெளிப்படாமலும் இல்லை!