லாக் அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசர சட்டம்.. அமித்ஷாவுக்கு கனிமொழி கடிதம்
சென்னை: லாக் அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திமுக எம்.பி. கனிமொழி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சாத்தான்குளத்தில் போலீசாரின் கொடூர தாக்குதலில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் உயிரிழந்தனர். தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார் இவ்வழக்கை விசாரித்து வருகின்றனர்.

சாத்தான்குளம் தந்தை- மகன் மரணத்துக்கு காரணமான இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவல்துறையினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே லோக்சபா எம்.பி. கனிமொழி மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகார் மனு கொடுத்திருந்தார்.
இதனடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக டிஜிபி,தூத்துக்குடி எஸ்பி, கோவில்பட்டி சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கனிமொழி இன்று ஒரு கடிதத்தை இ மெயில் மூலம் அனுப்பியுள்ளார்.
அதில், விசாரணை மரணங்கள் மற்றும் காவல்துறை சித்ரவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தி உள்ளார். மேலும் இத்தகைய அவசர சட்டங்களால்தான் லாக் அப் படுகொலைகளை நிறுத்த முடியும் எனவும் கனிமொழி சுட்டிக் காட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications