விஜய்க்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுவேன்.. எச்சரிக்கும் ராஜேஸ்வரி பிரியா
சென்னை: புகைப்பிடித்தலினால் மரணம் விளைகிறது. வருங்கால சந்ததியினர் ஆயுளோடு இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக அனைத்து மக்கள் அரசியல் கட்சித்தலைவர் ராஜேஸ்வரி பிரியா கூறியுள்ளார். நான் நினைத்தால் சுவர்களில் விஜய்க்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுவேன் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒன் இந்தியா தமிழ் அரசியல் யூடுயூப் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
நான் ரெடி வரவா பாடலில் புகை பிடிப்பது போல வருகிறது. நான் சொன்ன பிறகுதான் அதில் புகைப்பிடிப்பது தவறு என்று போட்டீர்கள். சினிமாவை பார்த்துதான் கற்றுக்கொண்டார்களா என்று கேட்கிறார்கள். சினிமாவை பார்த்து ரசிகர்கள் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்று சொல்ல முடியுமா? பிறகு ஏன் சினிமாவில் கருத்து வைக்கிறீர்கள். தலைவர் கூறும் கருத்துக்களைக் கேட்டு கை தட்டும் ரசிகர்கள் கூட்டம் இதற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று கேட்கிறார் ராஜேஸ்வரி பிரியா.
நான் போராடுவது விஜய்க்கு எதிராக மட்டுமல்ல லியோ இயக்குநர் லோகேஸ் கனகராஜ், நான் ரெடி வரவா பாடிய அசல் கோளாறு , பாடலை எழுதியவர்கள், பாடலை ஒளிப்பரப்பியவர்கள் மீது எல்லோர் மீதுதான் புகார் கொடுத்துள்ளேன். ஏன் விஜய் பற்றி மட்டும் சொல்கிறார்கள். விஜய்க்கு டேக் செய்கிறார்கள் எனவேதான் நான் டிஜிபிக்கு புகார் கொடுத்துள்ளேன். என்னுடைய குரலை நசுக்கப்பார்க்கிறார்கள். எனக்கு இணைய தளத்தில்தான் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுகின்றனர். நான் நினைத்தால் நகரம் முழுவதும் போஸ்டர்களில் விஜய்க்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுவேன் என்று கூறியுள்ளார் ராஜேஸ்வரிபிரியா.

கீழ்த்தரமான செயல்களையும் கீழ்த்தரமான நடவடிக்கைகளையும் செய்வதற்கு நாங்கள் ஆள் இல்லை. என்னுடைய பார்வை வேறு மாதிரியானது. நான் அரசியல் கட்சி நடத்தும் பெண் எங்கள் கட்சியில் இருக்கும் இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். நான் படித்திருக்கிறேன். என் கட்சி இளைஞர்கள் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். புகைப்பிடிப்பதனால் மரணம் விளையும் என்று எல்லோருக்குமே தெரியும். அப்படி இருக்கையில் இது போன்ற ஒரு விசயத்தை இளைஞர்களுக்கு கொண்டு செல்லாதீர்கள் என்றுதான் சொல்கிறேன்.
விஜய் அரசியல் வரப்போகிறார் என்பதைப்பார்த்து பயந்து விட்டதாக சொல்கிறார்கள். நான் ஒன்றும் பயப்படவில்லை. அவர் இப்போதுதானே அரசியலுக்கு வரப்போவதாக சொல்கிறார். சர்க்கார் படத்தின் போது அரசியலுக்கு வருவதாக சொல்லவில்லையே. நான் அப்போதே குரல் கொடுத்தேன். நான் விஜய்க்கு எதிராக போராடவில்லை. உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் ஒரு சமூக பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றுதான் நான் சொல்கிறேன் என்றும் ராஜேஸ்வரி பிரியா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications