நீடிக்கும் ஈரான்- இஸ்ரேல் போர்! குமரி மீனவர்களை மீட்க எம்பி விஜய் வசந்த் மத்திய அரசுக்கு கடிதம்
சென்னை: ஈரான், இஸ்ரேல் நாடுகளில் சிக்கியுள்ள குமரி மீனவர்களை மீட்க வேண்டும் என மத்திய அரசுக்கு கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்றைய தினம் கடிதமும் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவரது அலுவலகம் சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது: போரின் பிடியில் உள்ள ஈரான் மற்றும் இஸ்ரேல் நாட்டில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை, குறிப்பாக ஆயிரத்திற்கும் மேலான குமரி மீனவர்களை மீட்டு பத்திரமாக தாயகம் கொண்டு வர வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற எம்பி விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் மூண்டுள்ள சூழ்நிலையில் அங்கு மிக பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போது அமெரிக்காவும் ஈரான் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அங்குள்ள மக்கள் மிக அபாயமான கட்டத்தில் உயிர் பிழைத்து வருகிறார்கள்.
அங்கு சிக்கிய இந்திய மாணவர்களை கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய அரசு பத்திரமாக மீட்டு வந்தது. தற்போது ஈரான் நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குமரி மீனவர்கள் தங்கி தொழில் செய்து வருகிறார்கள். இஸ்ரேல் நாட்டிலும் பல மீனவர்கள் பணி செய்து வந்தனர்.

இவர்கள் தற்போது பதற்றத்துடன் இருந்து வருகிறார்கள். இவர்களை அங்கிருந்து மீட்டு வருவது அரசின் தலையாய கடமை. ஆகவே இந்திய அரசு அங்குள்ள மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications