குமரி மண்ணின் மைந்தன்.. இஸ்ரோ தலைவராக வி.நாராயணன் நியமனம்.. விஜய் வசந்த் எம்பி கூறிய வாழ்த்து
சென்னை: இஸ்ரோவின் புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் விண்வெளி சார்ந்த ஆய்வு, திட்டங்களை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. இந்த இஸ்ரோவின் தலைவராக கேரளாவை சேர்ந்த சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த வாரம் முடிவுக்கு வர உள்ளது.

இதையடுத்து இஸ்ரோவின் அடுத்த தலைவர் யார்? என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. அதன்படி இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வி.நாராயணன் தமிழகத்தை சேர்ந்தவர். கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட வி நாராயணன் இஸ்ரோ தலைவராக ஜனவரி 14ம் தேதி பொறுப்பேற்று செயல்பட உள்ளார். இவர் அடுத்த 2 ஆண்டுகள் இஸ்ரோ தலைவராக செயல்படுவார்.
இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்கும் வி. நாராயணன் காரக்பூர் ஐஐடியில் படித்தார். ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இஸ்ரோவில் 40 ஆண்டுகளாக இவர் பணியாற்றி வருகிறார். பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
ராக்கெட் மற்றும் விண்கல உந்துதல் தொழில் நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர் இவர். இஸ்ரோவின் ஜிஎஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் திட்டத்திற்கு CE20 கிரையோஜினிக் என்ஜின் உருவாக்குவதில் இவரது பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆதித்யா விண்கலம், மற்றும் ஜி.எஸ்.எல்.வி எம்.கே III, சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3 உள்ளிட்ட திட்டங்களிலும் இவரது பங்கு முக்கியமானது.
ஏற்கனவே இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த கே. சிவன் பதவி வகித்து வந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் இஸ்ரோவின் தலைவராக சிவன் பதவி வகித்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு தமிழர் இஸ்ரோ தலைவராக உள்ளார். இந்நிலையில் தான் வி நாராயணனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அதன்படி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜய் வசந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகின் தலைசிறந்த விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான இஸ்ரோ இந்திய நாட்டை பெருமைப்படுத்தும் விதத்தில் பல்வேறு சாதனைகள் செய்து வருகிறது. இந்தியா விண்வெளியில் காலடி எடுத்து வைப்பதற்கு காரணமான இந்த ஆராய்ச்சி நிறுவனம் டாக்டர் அப்துல் கலாம் போன்ற பல விஞ்ஞான தலைவர்களை நாட்டுக்கு தந்துள்ளது.
உலகமே உற்று நோக்கும் நமது விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக நமது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வி நாராயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் செய்தி. அவரது திறமையும் அனுபவமும் நமது விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சாதனைகளின் உச்சிக்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் திட்டங்களில் 40 வருட கால அனுபவத்தைக் கொண்டிருக்கும் நாராயணன் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications