தான் மட்டும் போகாமல்.. ரஜினி மன்றத்தினரையும் இழுத்துக் கொண்டு.. பாஜகவில் ஐக்கியமான "கராத்தே"!
சென்னை: காங்கிரஸ் கட்சி முன்னாள் பிரமுகர் கராத்தே தியாகராஜன் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்து கொண்டார்.
சென்னை திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் எல் முருகன், தேசிய பொதுச் செயலாளரும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி தென் சென்னை காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கராத்தே தியாகராஜன் அவருடைய ஆதரவாளர்களுடன் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டார்.

சலசலப்பு
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் கடந்த 2019-ஆம் ஆண்டு ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியிருந்தார். திமுக கூட்டணியில் இருந்து கொண்டே தனித்து போட்டி என பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இணைய முடிவு
இதையடுத்து அவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே பேசி வந்தார். 2017ஆம் ஆண்டுக்கு பிறகு அரசியல் கட்சியை தொடங்குவது குறித்து ரஜினி முடிவெடுக்காத நிலையிலும் அவர் நிச்சயம் கட்சியை தொடங்குவார் என கராத்தே அடித்து சொல்லிக் கொண்டிருந்தார்.

முடிவில் உறுதி
இவர் ரஜினிக்கு நெருக்கமானவர். மேலும் அவர் தொடங்கும் கட்சியில் இணைய முடிவு செய்திருந்தார். இந்த நிலையில் உடல்நலத்தை காரணம் காட்சி ரஜினி இனி அரசியல் கட்சியை தற்போது தொடங்க போவதில்லை என அறிவித்துவிட்டார். இதுகுறித்து மறுபரிசீலனை செய்ய ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் ரஜினி தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

ரஜினி அனுமதி
மேலும் தனது மன்றத்தில் உள்ளவர்கள் அதிலிருந்து விலகிக் கொண்டு மாற்றுக் கட்சியில் சேர்ந்து கொள்ளலாம் என ரஜினி அனுமதி அளித்திருந்ததை அடுத்து பலர் மாற்றுக் கட்சியில் இணைந்தனர். இந்த நிலையில் கராத்தே தியாகராஜன் தனது ஆதரவாளர்களுடன் இன்று பாஜகவில் இணைந்து கொண்டார். அவருடன் சில ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் இணைந்தனர்.












Click it and Unblock the Notifications