மு.க.ஸ்டாலினை சண்டைக்கு இழுக்கும் கராத்தே.. எடப்பாடிக்கு ஆதரவாக அறிக்கை..!
Recommended Video
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சண்டைக்கு அழைக்கும் வகையில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் பொறுப்பு மேயர் கராத்தே தியாகரஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது;
தமிழக முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்து அண்ணன் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் கடந்த கால நிகழ்வை நினைவுப்படுத்த விரும்புவதாக கூறியிருக்கிறார்.
அண்ணன் ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது 2007-ம் ஆண்டுநவம்பர் 1-ம் தேதி தனது நண்பருடன் தாய்லாந்து தலைநகர் பாங்காங் சென்றதாகவும், அந்தத் தகவல் முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு ஸ்டாலின் விமானம் ஏறும் போது தான் தெரிந்தது எனவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், அமைச்சராக இருந்து கொண்டு மத்திய அரசின் அனுமதி பெறாமல் அண்ணன் ஸ்டாலின் வெளிநாடு சென்றுவிட்டார் என அப்போது சர்ச்சைகள் எழுந்ததை நினைவுப்படுத்துவதாக கராத்தே தியாக ராஜன் கூறியிருக்கிறார்.
இந்த அறிக்கை தொடர்பாக கராத்தே தியாகராஜனை ஒன் இந்தியா தமிழ் சார்பாக தொடர்பு கொண்டு பேசிய போது, உண்மையை தானே சொல்லி இருக்கிறேன், அதில் என்ன உள்நோக்கம் இருக்கிறது என பதிலளித்தார்.
கராத்தே பின்னணி
கராத்தே தியாகராஜனை பொறுத்தவரை அதிமுகவில் இருந்து காங்கிரசுக்கு வந்து தற்போது அந்தக் கட்சியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 2001-ல் ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த போது துணை மேயராக இருந்தவர் கராத்தே தியாகராஜன். அப்போது அதிமுக தென் சென்னை மாவட்டச்செயலாளராக இருந்தார்.
ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பெறுவதற்காக மேயராக இருந்த ஸ்டாலினுக்கு குடைச்சல்கள் தந்தார். ஒரு கட்டத்தில் ஸ்டாலின் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட பொறுப்பு மேயராக ஆகி தனது பதவிக்காலத்தை நிறைவு செய்தார்.
காலப்போக்கில் கராத்தே காங்கிரசுக்கு இடம்பெயர்ந்தாலும் திமுகவுடனான பனிப்போர் மட்டும் நடந்துகொண்டு தான் இருந்தது. அண்மையில் கூட்டணி தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் தற்போது காங்கிரஸில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதற்கு காரணம் ஸ்டாலின் என நினைக்கிறாரோ என்னவோ..!