தமிழக அரசுக்கு செக்? காவிரி- குண்டாறு திட்டத்திற்கு.. எதிராக கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு
சென்னை: தமிழ்நாடு அரசின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றான காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிராகக் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் குடிநீர் பிரச்சினை பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. பருவம் தவறிப் பெய்யும் மழை, கோடைக் காலத்தில் நிலவும் கடுமையான வறட்சி ஆகியவை காரணமாகத் தமிழக மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் ஆண்டுதோறும் சுமார் 40 டிஎம்சி அளவு உபரி நீரானது காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் கடலில் கலக்கிறது

காவிரி- வைகை -குண்டாறு திட்டம்
இந்த உபரி நீரைப் பயன்படுத்தும் வகையில் கடந்த 1958ஆம் ஆண்டு காவிரி, குண்டாறு, வைகை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனாலும், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பிலேயே போடப்பட்டது. இந்நிலையில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு 2008ஆம் ஆண்டு அப்போது இருந்து திமுக அரசு 3,290 கோடி ரூபாய் செலவில் காவிரி- வைகை -குண்டாறு இணைக்கும் திட்டத்தை அறிவித்தது.

கர்நாடகா வழக்கு
இருப்பினும் இதில் பணிகள் எதுவும் தொடங்கப்படாமலேயே இருந்தது. இந்தச்சூழலில் ரூ 14,000 கோடி செலவில் இத்திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாக கடந்த ஆண்டு அதிமுக அரசு அறிவித்தது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிராகக் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு
தமிழ்நாடு அரசு மேகதாது விவகாரத்தில் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறதோ அதே நிலைப்பாட்டைத்தான் காவிரி - குண்டாறு விவகாரத்தில் கர்நாடக அரசு எடுக்கும் என்பதைக் குறிப்பிட்டு, இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது. காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் மட்டும் நிறைவேறினால், ஏழு மாவட்டங்களில் இருக்கும் பல லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விரிவான திட்ட அறிக்கை
முன்னதாக நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மதிமுக எம்பி வைகோ மற்றும் திமுக எம்பி சண்முகம் ஆகியோர் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் விஷ்வேஸ்வர், காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகதாது அணை குறித்து, கர்நாடக அரசு அறிக்கை அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications