கர்நாடகாவின் காந்தி நகர் தொகுதி.. ஓபிஎஸ் தரப்புக்கு எதிராக பறந்த புகார்.. விடாத எடப்பாடி பழனிசாமி
சென்னை: கர்நாடகவின் காந்திநகர் தொகுதியில் அதிமுக பெயரில் ஓபிஎஸ் தரப்பு அளித்த வேட்பு மனு ஏற்றுக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி குமார் புகார் மனு அளித்துள்ளார்.
கர்நாட மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவும் போட்டியிட விரும்பியது. பாஜக கூட்டணியில் போட்டியிட முதலில் அதிமுக ஆர்வம் காட்டியது.

ஆனால், இதற்கு பாஜக ஒப்புதல் தெரிவிக்காததால் தனித்து புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததால் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக புலிகேசி நகர் தொகுதியில் அன்பரசன் போட்டியிடுகிறார். அவருக்கு இரட்டை இலை சின்னமும் ஒதுக்கப்பட உள்ளது.
இதனிடையே, கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் 3 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். புலிகேசி நகர், கோலார் தங்க வயல், காந்தி நகர் ஆகிய தொகுதிகளில் ஓபிஎஸ் அணியின் சார்பில் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். புலிகேசி நகர் தொகுதியில் தாக்கல் செய்த ஓபிஎஸ் அணி வேட்பாளர் நெடுஞ்செழியன் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கையெழுத்து சரியாக போடவில்லை, ஆவணங்கள் முறையாக இல்லை எனக்கூறி அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அதேவேளையில், காந்திநகரில் குமாரும், கோலார் தங்கவயலில் அனந்தராஜாவின் வேட்பு மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில், கோலார் தங்கவயல் தொகுதியில் ஆனந்தராஜா சுயேட்சை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், காந்திநகரில் போட்டியிடும் குமார் அதிமுக வேட்பாளர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கடும் அதிருப்தியை கொடுத்தது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியிருந்தார். இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திட தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் அந்த மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி குமார், ஓ பன்னீர் செல்வம் தரப்புக்கு எதிராக புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில், எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், சட்ட விரோதமாக அதிமுகவின் பி பார்மை ஓ பன்னீர் செல்வம் பயன்படுத்தியதாக குற்றாச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், காந்தி நகர் தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் அணி நிறுத்திய குமார் என்ற வேட்பாளரை அதிமுக வேட்பாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரட்டை இலை சின்னத்தை தங்களை தவிர கர்நாடகாவில் வேறு எந்த தரப்புக்கும் ஒதுக்கக்கூடாது. கோலார் தங்க வயல் தொகுதியிலும் இரட்டை இலை சின்னம் ஓபிஸ் தரப்பு வேட்பாளருக்கு ஒதுக்கக்கூடாது என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications