உயிர் பிரச்சினை.. தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரில் பாக்கி.. குறுவை தப்புமா? துரைமுருகன் அச்சம்
சென்னை: தமிழகத்திற்கு திறக்க வேண்டிய காவிரி நீரில் 9.2 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா பாக்கி வைத்துள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். குறுவை சாகுபடி தமிழகத்தில் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. டெல்டா பயிரை காப்பாற்றுவதற்கு காவிரி நீர் கண்டிப்பாக தேவை. இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் கடந்த மாதம் குறிப்பிட்ட அளவை விட குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது குறித்தும், மேகதாது அணை விவகாரம் குறித்தும் ஆலோசிப்பதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றார்.

அங்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் அவர்களை சந்தித்து பேசினார். அவரிடம் காவேரி நதிநீர் பங்கீடு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் இருந்து நேற்று இரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், தமிழகத்திற்கு காவிரி நதியில் இருந்து கர்நாடகா அரசு தரும் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது.
ஒரு நாளைக்கு தோராயமாக ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும். கடந்த மாதம் முதல் கடந்த மூன்றாம் தேதி வரையில் 12 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், 2.9 டிஎம்சி தண்ணீர் தான் திறந்து விடப்பட்டுள்ளது. 9.2 டிஎம்சி தண்ணீர் வேறுபாடு உள்ளது. இதனால் குறுவை சாகுபடி கூட தமிழகத்தில் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
டெல்டா பயிரை காப்பாற்றுவதற்கு காவிரி நீர் கண்டிப்பாக தேவை. இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை. எனவே இதுகுறித்து காவிரி தீர்ப்பாயம் கர்நாடகா அரசு வலியுறுத்த சொல்லுமாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கிடம் கேட்டுக்கொண்டேன் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி தண்ணீரை கர்நாடகா அரசு திறந்து விடாமல் இருப்பது சட்டப்படி குற்றம் எனவும் துரைமுருகன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications