ஆதீனம் விவகாரம்.. சமீபத்தில் பாஜகவில் இணைந்த "அவர்" தான் காரணம்! போட்டு உடைக்கும் கார்த்தி சிதம்பரம்
சென்னை: ஆதீனம் விவகாரத்தில் பிரச்சினை ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் ஆதீனம் விவகாரம், 2024 மக்களவை தேர்தல், மகளிர் ஊக்கத் தொகை என பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விளக்கமாகப் பேட்டி அளித்தார்.

கார்த்தி சிதம்பரம்
ஆதீனம் விவகாரத்தில் தமிழக அரசு தலையீடு குறித்த கேள்விக்குப் பதில் அளித்த கார்த்தி சிதம்பரம், "காலங்காலமாக ஆதினம், அரசு, கடவுள், நம்பிக்கை போன்ற விஷயங்கள் சுகமாகத்தான் இருந்தது. அண்மையில் பாஜக வில் புதிதாக ஒருவர் சேர்ந்துள்ளார். அவர் கொள்கை ரீதியாகச் சேர்ந்ததாகத் தெரியவில்லை.

யார் காரணம்
அவருடைய கடந்த கால பணியிலிருந்து நீங்கி, அரசியல் கட்சியைத் தேடி அவருடைய சௌகரியத்திற்காக அந்த அரசியல் கட்சியில் சேர்ந்ததால், அதைக் குழப்ப வேண்டும் என்கிற எண்ணத்தோடு சில சம்பவங்கள் நடக்கின்றன. தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஆன்மீகம், அரசியல், நாத்திகம், ஆத்திகம், பெரியார், பிள்ளையார் அனைவரும் சமூகமாக இருந்த ஊர். இந்த குழப்பங்கள் பத்திரிக்கையில் வாதமாக இருக்கலாமே தவிர சமூகத்தில் எந்தவித மாற்றத்தையும் கொண்டுவராது.

தேர்தல்
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் முதல் இலக்கு குடியரசுத் தலைவர் தேர்தல் தான். முதலில் நாங்கள் தாண்ட வேண்டிய கிணறு குடியரசுத் தலைவர் தேர்தல் தான். இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து பொதுவான வேட்பாளரை நிறுத்தி பாஜக வேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டும். குறைந்தது போட்டியில் நெருக்கமான முடிவு வந்தால் கூட அதுவே எங்களுக்கு வெற்றியாகத் தான் நான் கருதுகிறேன்.

நிதி நிலை
தமிழ்நாட்டின் நிதி நிலை என்ன என்று தெரிவதற்காக வெள்ளை அறிக்கை ஒன்று கொடுத்திருந்தனர். அதை முழுமையாக வரவேற்பேன். இருக்கும் நிதியை வைத்துத் தான் அவர்கள் பங்கீடு அளிக்க வேண்டும். எனவே முதியோர் உதவித் தொகை விவகாரத்தில் பயனாளிகளுக்கு மட்டும்தான் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்று எண்ணுவது தவறில்லை. ஆனால் தகுதியுடையவர்கள் சேர்க்காமல் இருந்திருந்தால் அதைப் பரிசீலனை செய்ய வேண்டும்.

மகளீர் உதவித்தொகை
திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லி இருந்தார்கள். ஆனால் தற்போது நிதி நிலை காரணமாக அமல்படுத்தாமல் உள்ளார்கள். 2026 இல் தான் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ஒதுக்கப்படும் என்று டிடிவி கூறியுள்ளார். அவர் எதிர்காலத்தைப் பற்றி பிரகடனம் செய்வதற்கு முன்பாக தனது எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications