“அண்ணி சொல்லுவாங்க..”.. கார்த்தி அப்படி சொன்னதுமே.. நெகிழ்ந்து போய் பார்த்த ஜோதிகா!
சென்னை: "பசங்க படிக்க நிறைய காசு தேவைப்படும்போது அண்ணி சொல்லுவாங்க.. காசு வச்சா ஆரம்பிச்சோம்..? அன்பு வச்சுதானே ஆரம்பிச்சோம்.. அது வரும்னு சொல்லுவாங்க.. அப்படி அண்ணி சொல்லலைனா அண்ணன் சூர்யா எப்படி தொடர்ந்து ஓட முடியும்?" என நடிகர் கார்த்தி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
அகரம் அறக்கட்டளை துவங்கி பல நலத்திட்டங்களை செய்து வருகிறார் நடிகர் சூர்யா. சூர்யா தனது குடும்பத்தினர் அனைவரின் பங்களிப்போடு இந்த அறக்கட்டளையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இதையடுத்து அகரம் அறக்கட்டளை துவங்கி 15 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் இன்று விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் எம்.பி பங்கேற்றுள்ளார்.

கார்த்தி உருக்கமான பேச்சு
இந்த விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, "அண்ணன் சூர்யா, பசங்க படிச்சிட்டா போதும் படிச்சிட்டா போதும்னு சொல்லுவாரு.. பசங்க படிக்க நிறைய காசு தேவைப்படும்போது அண்ணி சொல்லுவாங்க.. காசு வச்சா ஆரம்பிச்சோம்? அன்பு வச்சுதானே ஆரம்பிச்சோம்.. அது வரும்னு சொல்லுவாங்க.. அப்படி அண்ணி சொல்லலைனா இவர் எப்படி தொடர்ந்து ஓட முடியும்?
கொரோனா காலகட்டத்தில் நிறைய மருத்துவமனைகளில் நிறைய கருவிகள் பற்றாக்குறையாக இருந்த காலத்தில் நான் பண்றேன் என அண்ணி முன்வந்தாங்க.. சிறு வயதில் இருந்து நான் அப்பா, அம்மாவை பார்த்து வளர்ந்திருக்கிறேன். அம்மா, வீட்டில் வேலை செய்யும் அம்மாவின் பிள்ளைக்கு பள்ளி கட்டணம் கட்ட காசு கொடுத்துட்டேன்.. உங்கிட்ட சொல்லல என்பார்.
குடும்பமே
ரயிலில் செல்லும்போது, சுமை தூக்குபவர் 50 ரூபாய் கேட்டால் எனக்கு அது அதிகமாக தோன்றும். ஆனால், அப்பா அவருக்கு 100 ரூபாய் கொடுப்பார். நான் பண விஷயத்தில் ரொம்ப கறார். எனக்கு ஜாஸ்தியாக கொடுப்பது போல இருக்கும். அதை அப்பாவிடம் கேட்டால், "நாம் தரும் 100 ரூபாயில் அவன் வீடு கட்டிருவானா? போகும்போது பிள்ளைக்கு சாப்பாடு வாங்கிட்டு போவான்" என்பார். இதுபோன்று நான் சின்ன வயதில் இருந்து நிறைய கேட்டுக் கொண்டிருக்கிறேன். அப்போ நாம் நல்லதே தான் செய்வோம்.. நம்முடன் இருப்பவர்களும் நல்லதே தான் செய்வார்கள்.
தியா, தேவ் பாக்கெட் மணி
தியாவும், தேவும், தங்களது பாக்கெட் மணியை அகரம் அறக்கட்டளைக்காக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போதுதான் எனக்கே தெரியவந்தது. தொடர்ந்து அடுத்தவர்கள் நல்லா இருக்கவேண்டும் என நினைப்பவர்கள் அகரத்துடன் கரம் சேருங்கள். அகரம் தொடர்ந்து பயணிக்கட்டும்." எனப் பேசியுள்ளார் கார்த்தி.












Click it and Unblock the Notifications