கோச்சிங் கிளாஸ் என்பது மிரட்டி பணம் பறிக்கும் தொழிலாக மாறிவிட்டது.. Byjusஐ சாடிய கார்த்தி சிதம்பரம்
சென்னை: டியூஷன் வகுப்புகள் என்பது இப்போது மிரட்டி பணம் பறிக்கும் தொழிலாக மாறிவிட்டது என விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பங்களைக் குறிவைத்து, சூழ்ச்சி மார்க்கெட்டிங் மூலம் அவர்களைக் கடன் சுழற்சியில் தள்ளுவதாக பைஜூஸ் நிறுவனத்தைச் சாடியுள்ளார்.
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முக்கியமானது பைஜூஸ். ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு டியூஷன் பயிற்சி அளிப்பதே பைஜூஸ் நிறுவனத்தின் முக்கிய தொழிலாகும்.
இருப்பினும், பைஜூஸ் நிறுவனம் கடந்த காலங்களிலும் அதன் விளம்பரங்களுக்காகப் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.

பைஜூஸ் நிறுவனம்
இந்நிலையில், பைஜூஸ் நிறுவனம் குறித்தும் அதன் மார்கெட்டிங் யுக்தி குறித்தும் கார்த்திக் சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். நிதி பகுகுணா என்ற பெண் பைஜூஸ் நிறுவனத்தின் மார்கெட்டிங் குறித்துப் பதிவிட்ட ட்வீட்க்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பங்களைக் குறிவைத்து, சூழ்ச்சி மார்க்கெட்டிங் மூலம் அவர்களைக் கடன் சுழற்சியில் தள்ளுவதாகச் சாடியுள்ளார்.

ஏழ்மை குடும்பங்கள்
இது தொடர்பாக நிதி பகுகுணா என்பவர் தனது ட்விட்டரில், "எவ்வித நெறிமுறைகளையும் பின்பற்றாத மார்கெட்டிங்கில் ஈடுபட்டுள்ளது பைஜூஸ். முசூரியில் ஏழை குழந்தைகளைக் குறிவைத்து ஒரு நாள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. எனது வீட்டில் வேலை செய்யும் பெண், இதை ஒரு இலவச நிகழ்ச்சி என்று நினைத்தார். மேலும், தனது மகளுக்குப் பள்ளி சார்பில் இலவசமாக லேப்டாப் வழங்கப்படும் எனச் சிலர் சொன்னார்கள் என என்னிடம் கூறினார்" எனப் பதிவிட்டிருந்தார்.

இலவச லேப்டாப்?
அதாவது முசூரி பகுதியில் பைஜூஸ் சார்பில் இலவச நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அங்குள்ள ஏழை குழந்தைகளைக் குறிவைத்து நடத்தப்பபட்ட இந்த சிறப்பு முகாமுக்கு அங்குள்ள குழந்தைகளிடம் இலவச லேப்டாப் கொடுப்பதாகக் கூறி அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தான் நிதி பகுகுணா என்ற பெண் நெறிமுறைகளற்ற மார்கெட்டிங் யுக்தி எனச் சாடியிருந்தார்.

மிரட்டி பணம் பறிக்கும் தொழில்
இந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம், "டியூஷன் வகுப்புகள் இப்போது மிரட்டி பணம் பறிக்கும் தொழில். பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பங்களைக் குறிவைத்து, சூழ்ச்சி மார்க்கெட்டிங் மூலம் அவர்களைக் கடன் சுழற்சியில் தள்ளுகிறார்கள். கல்வியை மிரட்டி பணம் பறிக்கும் தொழிலாக மாறிவிடக் கூடாது" எனப் பதிவிட்டுள்ளார். மேலும், இதைத் தடுக்க அரசு உரியச் சட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்று பதிவிட்டுள்ள அவர், அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் டேக் செய்துள்ளார்.

கார்த்திக் சிதம்பரம் சாடல்
பைஜூஸ் நிறுவனத்தை கார்த்தி சிதம்பரம் விமர்சிப்பது இது முதல்முறை இல்லை. முன்னதாக கடந்த மாதம் யுபிஎஸ்சி தேர்வில் வென்ற முதல் 100 பேரில் 36 பேர் பைஜூஸ் நிறுவனத்தின் மூலம், சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாரானவர்கள் என்ற ரீதியில் விளம்பரம் வெளியாகியிருந்தது. அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்த நிலையில், அப்போதே பைஜூஸ் நிறுவன விளம்பரங்கள் மற்றும் அதன் நிதி ஆதாரம் குறித்த விவரங்களை விசாரிக்க வேண்டியது அவசியம் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications