கார்த்தி சிதம்பரம் மீதான 260 சீனர்களுக்கு சட்டவிரோத விசா வழக்கு- தொழிலதிபரின் மனு டிஸ்மிஸ்!
சென்னை: காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் மீதான 260 சீனர்களுக்கு சட்டவிரோத விசா பெற்றுத்தர லஞ்சம் வாங்கிய வழக்கில், அமலாக்கப்பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க கோரிய தொழிலதிபரின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பஞ்சாப் மாநிலம் மானசாவில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணிக்காக, 2011-ல் சீன நாட்டவருக்கு விசாக்கள் வழங்க லஞ்சம் பெற்றதாக கடந்த ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக தொழிலதிபர் ரமேஷ் துஹார் வீட்டில் சோதனை நடத்தி, அவரது லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கப் பிரிவும் விசாரணை நடத்தியது. இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க கோரி ரமேஷ் துஹார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லியில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி, தொழிலதிபர் ரமேஷ் துஹாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
என்ன வழக்கு?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நடத்திய வேதாந்தா குழுமம், பஞ்சாப் மாநிலத்தில் மின் நிலையம் அமைத்தது. இந்த வேதாந்தாவின் மின்நிலையத்தில் பணிபுரிய 260 சீன நாட்டவருக்கு சட்டவிரோதமாக முறைகேடா விசா வழங்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
260 சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமன், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். 2-வது குற்றவாளியாக கார்த்தி சிதம்பரம் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ ஏற்கனவே சோதனை நடத்தி இருந்தது.
இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், 260 சீனர்கள் சட்டவிரோதமாக விசா பெற பாஸ்கர் ராமனை அணுகினர். இதற்காக ரூ50 லட்சம் லஞ்சம் கைமாறியது என சிபிஐ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications