“டுவிஸ்ட்” கார்த்தி சிதம்பரம்.. காங்கிரஸ் தேர்தலில் யார் “சப்போர்ட்”? பாஜகவை எதிர்க்க “சரியான” ஆளாம்
சென்னை: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் கேரள எம்.பி. சசி தரூரை ஆதரிப்பதாக சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அறிவித்து இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து பதவி விலகினார். அதன் பின்னர் புதிய தலைவராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை.
காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சோனியா காந்தியே இடைக்கால தலைவராக பதவியேற்று கட்சியை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். ஆனால், அடுத்தடுத்த தேர்தல்களில் படுதோல்வியடைந்ததால் அக்கட்சிக்குள் பூசல்கள் வெடித்தன.
தலைவர் தேர்தல்
இந்த நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 தேதி தொடங்கி கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி நிறைவடைந்தது.
வேட்பாளர் பட்டியல்
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளார் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைமை வெளியிட்டது. இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றனர். சசி தரூருக்கு கேரள காங்கிரஸ் மற்றும் அகில இந்திய காங்கிரஸில் எதிர்ப்பலை இருப்பதால் கார்கேவுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.
கார்த்தி சிதம்பரம் ஆதரவு
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் 2 வேட்பாளர்களில் யாருக்கேனும் ஆதரவாக பிரச்சாரம் செய்ய விரும்பினால் முதலில் கட்சிப் பதவிலிருந்து விலக வேண்டும் என்று தேர்தல் நடத்தை விதியை கட்சித் தலைமை வெளியிட்டது. இந்த சூழலில் சசி தரூரை ஆதரிப்பதாக சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பாஜகவை எதிர்க்க சரியானவர்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசி தரூரை ஆதரிக்கிறேன். அவரது நவீனத்துவமான அணுகுமுறை பாஜகவின் பிரிவினைவாத அரசியலை எதிர்த்து போரிட உதவும். கட்சியை கடந்த மக்களிடமும் சென்றடைவோம். வழக்கமான நடைமுறை உதவாது. கட்சியின் செயல்பாடுகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார்.