உஷாரான கார்த்தி சிதம்பரம்! மாணிக்கம் தாகூர் மேட்டர்ல.. இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற விஷயத்தை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறி வருகிறார். இப்படி இருக்கையில் அக்கட்சியை சேர்ந்த மற்றொரு எம்பியான கார்த்தி சிதம்பரம் இந்த விஷயத்தில் சொல்லியிருக்கும் கருத்துக்கள் கவனம் பெற்றிருக்கின்றன.
ஆட்சியில் பங்கு கொடுத்தால் இருப்போம்.. இல்லையெனில் தவெகவுக்கு தாவி விடுவோம் என்கிற ரீதியில் காங்கிரஸ் நிர்வாகிகளின் பேச்சுக்கள் இருக்கின்றன. குறிப்பாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற மேட்டரை மாணிக்கம் தாகூர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

போதாத குறைக்கு காங்கிரஸ் செயற்குழுவை கூட்டி அதில் தீர்மானத்தையும் நிறைவேற்றியிருக்கிறார் மாணிக்கம் தாகூர். நேற்று முன்தினம் மதுரை திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடியது. இதில் பங்கேற்று பேசிய மாணிக்கம் தாகூர், "நாங்கள் கேட்பதெல்லாம் மரியாதையும் அன்பையும்தான். திமுக அமைச்சர்கள் பேசுவது வலியை கொடுக்கிறது. ராகுல் காந்தி தமிழக முதலமைச்சரை சகோதரர் என்று அழைக்கிறார்.
அதேபோல எங்களுக்கும் மரியாதை வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் அமைச்சர்கள் காங்கிரஸை வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும் என்று கூறுகிறார்கள். கூட்டணி குறித்து அசால்ட்டாக பேசுகிறார்கள். இதெல்லாம் வலியை கொடுக்கிறது. நாங்கள் உங்களோடு இருந்து நீங்கள் செய்த தவறுகளுக்காக பழியை சுமந்தவர்கள். எங்களை பொறுத்தமட்டில் நாங்கள் கேட்பதெல்லாம் மரியாதை மட்டும்தான்.
எங்களை தாக்கினால் நாங்கள் திருப்பி தாக்குவோம். பூத் கமிட்டியில் ஆள் இல்லை என்று விமர்சிக்கிறார்கள். நாங்கள் இதற்கான பட்டியலை ரெடி செய்திருக்கிறோம். பூத் கமிட்டி ஆட்களுக்கான கூட்டத்தை போட்டு நாங்கள் பலத்தை நிரூபிப்போம்" என்று பேசியிருக்கிறார். மட்டுமல்லாது இந்த கூட்டத்தில் 'ஆட்சியில் பங்கு தர வேண்டும். அதிக எண்ணிக்கையிலான கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும். உள்ளாட்சியில் 30 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்' என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அதேபோல மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்தான் களமிறங்குவார் என்றும், எப்பாடு பட்டாவது காங்கிரஸுக்காக இந்த தொகுதியை கேட்டு வாங்க வேண்டும் எனவும் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கார்த்தி சிதம்பரம் பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, "இன்று நாங்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம் தேசிய அளவில் இந்தியா கூட்டணிக்கு நாங்கள் தலைமை தாங்குகிறோம். தமிழ்நாட்டு அளவில் திராவிட முன்னேற்ற கழகம் இந்த கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. அந்தக் கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம்.
தேர்தலில் தொகுதி பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் ஒரு கமிட்டியை அமைத்திருக்கிறோம். அவர்கள் சட்டமன்ற கூட்டத்தொடரை முடித்துவிட்டு வரும் 22ஆம் தேதி கமிட்டி அமைக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். இந்த இரண்டு கமிட்டியும் பேசி, எத்தனை தொகுதிகளில் கூட்டணி கட்சி தொகுதிகள் போட்டியிடும் என்றும், குறிப்பாக காங்கிரஸ் எத்தனை தொகுதியில் போட்டியிடும் என்றும் நிர்ணயம் செய்யும். அதன் பிறகு எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி நிற்கும் என்பதை அடையாளம் காண்போம்.
பிறகு வேட்பாளரை தேர்ந்தெடுத்து, கூட்டணியின் சார்பில் பிரச்சாரம் செய்து, தேர்தல் முடிவுகள் வரும். முடிவுகளுக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.
மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரசார் போட்டியிடப் போவதாக தகவல்கள் வருகிறது, அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த கார்த்திக் சிதம்பரம், "கட்சியில் நிறைய பேர் நிறைய கருத்து சொல்வார்கள். அது கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்தாக இருக்காது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 234 தொகுதிகள்தான் இருக்கிறது. இதில் எந்த தொகுதியில் களம் காண்பது என்பதை பேச்சுவார்த்தையில்தான் முடிவாகும்" என கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications