எடப்பாடி ஒரு.. அந்த வார்த்தை சொன்னதுமே டக்கென மைக்கை பிடுங்கிய கரு.நாகராஜன்.. மேடையில் பரபரப்பு!
பாஜக நிர்வாகி எடப்பாடி பழனிசாமி பற்றி பேசியதுமே மைக்கை பறித்தார் கரு.நாகராஜன்.
சென்னை : பாஜக ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை சென்னை மத்திய மாவட்ட பாஜக தலைவர் விமர்சிக்க முயன்ற நிலையில், மேடையிலேயே உடனடியாக மைக்கை பிடுங்கி எதிர்ப்பு தெரிவித்தார் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன்.
பாஜக - எடப்பாடி பழனிசாமி அணியினர் இடையே கடந்த சில நாட்களாக தொடர் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இரு தரப்பினரும் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பாஜக ஆர்ப்பாட்டத்தின்போது எடப்பாடி பழனிசாமியை பாஜக நிர்வாகி விமர்சித்ததால் அதிர்ச்சியடைந்தார் கரு.நாகராஜன்.

வடமாநிலத் தொழிலாளர் சர்ச்சை
தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், அச்சுறுத்தல் காரணமாகவே அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான வீடியோ மற்றும் செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. உடனடியாக அவை போலியானவை என்றும், வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பரவும் தகவல்கள் அனைத்தும் வதந்தி எனவும் தமிழ்நாடு அரசு விளக்கமளித்தது. இதுபோன்று வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசும், காவல்துறையும் அறிவித்தன.

அண்ணாமலை மீது வழக்கு
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, வடமாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரசாரங்களுக்கு முடிவு கட்டுவாரா தமிழக முதல்வர் எனக் கேட்டு ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையின் அடிப்படையில், வதந்தி பரப்புதல், வன்முறையைத் தூண்டுதல், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனைக் கண்டித்து இன்று பாஜக சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மைக்கை பறித்த கரு.நாகராஜன்
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய சென்னை மத்திய மாவட்ட பாஜக தலைவர் விஜய் ஆனந்த், எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்க முற்பட்டார். அப்போது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், திடீரென அவரிடம் இருந்து மைக்கை பறித்தார். இந்த நிகழ்வு பாஜக ஆர்ப்பாட்ட மேடையில் இருந்தவர்கள் மத்தியிலும், பாஜக தொண்டர்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆளுமையில்லாத எடப்பாடி
இன்று தமிழ்நாட்டில் பாஜக தான் எதிர்க்கட்சி என்பதை ஒவ்வொரு கூட்டத்திலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம், எதிர்க்கட்சி பாஜக தான் என சென்னை மத்திய மாவட்ட பாஜக தலைவர் விஜய் ஆனந்த் பேசுகையில் அருகில் நின்று கைதட்டினார் கரு.நாகராஜன். தொடர்ந்து விஜய் ஆனந்த், 'திறனற்ற எடப்பாடி.. ஆளுமையில்லாத எடப்பாடி.." என்று பேசத்தொடங்கியதும் உடனே அவரிடமிருந்து மைக்கை பிடுங்கினார் கரு.நாகராஜன்.

பாஜக அதிமுக மோதல்
பாஜக ஐடி விங் மாநில தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து பலரும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். கூட்டணி கட்சியில் இருந்தே நிர்வாகிகளை இழுப்பதை பாஜகவினர் விமர்சித்தனர். எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து அவரது உருவப்படத்தையும் தீவைத்துக் கொளுத்தினர். பாஜக நிர்வாகிகள் பலரும் ஈபிஎஸ்ஸை கடுமையாக அட்டாக் செய்து பேசி வந்தனர்.

சலசலப்பு
அதற்கு அதிமுக நிர்வாகிகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், இந்த மோதல் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமைந்து விடும் என்பதால், அதிமுக - பாஜக இடையே மோதல் போக்கை தணிக்க இரு தரப்பும் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக நிர்வாகி ஒருவர், எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்க முயன்றதும், அதனை தவிர்க்கும் விதமாக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் மைக்கை பறித்ததும் பாஜக கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications