காமராஜருக்கு மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதா? காங்கிரஸ் விளக்கம்
சென்னை: காமராஜரை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் தராதவர் கருணாநிதி என நாங்குநேரியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசிய நிலையில், அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது தமிழக காங்கிரஸ் கமிட்டி.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில், முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் ராஜேந்திரபாலாஜி பொய்யை கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அ.இ.அதி.மு.க. அமைச்சர்கள் உண்மைக்கு புறம்பான அவதூறு செய்திகளை நாள்தோறும் பரப்பி வருவதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளதோடு, மேற்கொண்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கண்டனம்
அ.இ.அ.தி.மு.க. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பெருந்தலைவர் காமராஜரின் உடலை சென்னை கடற்கரையில் அடக்கம் செய்வதற்கு காங்கிரஸ் கட்சியினர் கோரியதை அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர் மறுத்துவிட்டதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் அவதூறு குற்றச்சாட்டு ஒன்றை கூறியிக்கிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக மறுக்கிறேன், கண்டிக்கிறேன்.
ஒப்புதல்
காங்கிரஸ் தலைவர்களான ராஜாராம் நாயுடு, திண்டிவனம் ராமமூர்த்தி, நெடுமாறன் ஆகியோரின் ஒப்புதலோடு கிண்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டு காமராஜர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இது குறித்து அன்றைய காங்கிரஸ் தலைவரான பழ. நெடுமாறன் ஒரு பேட்டியில் இதுகுறித்து தெளிவுபடக் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், சென்னைக் கடற்கரை சாலையில் பெருந்தலைவர் காமராஜரை அடக்கம் செய்ய வேண்டுமென்று காங்கிரஸ் தலைவர்கள் எவரும் கோரவில்லை என்பதையும் உறுதிபடக் கூறியிருக்கிறார்.
மனநோயாளி
உண்மைக்கு புறம்பான, தவறான தகவல்களை ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும். சமீபகாலமாக ஒரு மனநோயாளியைப் போல ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கள் அமைந்திருக்கின்றன. தமிழக அரசியலில் ஒரு மிகச் சிறந்த காமெடியனாக, அரசியல் கோமாளியாக ராஜேந்திர பாலாஜி பேசி வருகிறார். இதனால், தற்காலிகமாக பரபரப்பு அரசியலுக்கு ஊடக வெளிச்சம் அவருக்கு கிடைக்கலாம்.
தகுதியில்லை
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயரை உச்சரிப்பதற்குக் கூட அ.தி.மு.க.வினர் எவருக்கும் தகுதியில்லை. பெருந்தலைவர் காமராஜர் மறைந்தவுடன் சென்னை மெரினா கடற்கரை சாலைக்கு காமராஜர் சாலை என்று பெயர் சூட்டி, கன்னியாகுமரியில் மணிமண்டபம் அமைத்த மறுநாளே நெல்லையில் சிலை அமைத்தவர் அன்றைய முதல்வர் கலைஞர்.
எச்சரிக்கை
எனவே, தோல்வி பயத்தில் உள்ள அ.இ.அ.தி.மு.க.வினர் பெருந்தலைவர் காமராஜரின் பெயரை பயன்படுத்தி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி மக்களை ஏமாற்றி, வாக்குகளை பெற்று விடலாம் என்று நினைப்பது வெறும் பகல் கனவாகத் தான் முடியும். இனியும் ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் மலிவான அரசியலுக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை பயன்படுத்தினால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.