கம்யூனிஸ்ட் ஆண்ட மேற்கு வங்கத்திலேயே கை ரிக்ஷா உள்ளது.. தமிழகத்தில் அதை ஒழித்தவர் கலைஞர் - ஸ்டாலின்
சென்னை: மனிதனை மனிதனே இழுக்கக்கூடிய கை ரிக்ஷா கொடுமை தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்று அதை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா கொடுத்தவர் கருணாநிதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக முன்னோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொற்கிழி வழங்கி கவுரவித்தார்.

கருணாநிதி பிறந்தநாள்
அப்போது பேசிய அவர் "தலைவர் கலைஞருடைய பிறந்தநாள் என்பது பெயருக்கு கொண்டாடப்படும் விழா அல்ல. அவர் முதலமைச்சராக இருந்தாலும் சரி எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் சரி, அவரது பிறந்தநாள் நாட்டு மக்களுக்காக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு பிறந்தநாளையும் கலைஞர் மக்களுக்காக பயன்படுத்தினார்.

கை ரிக்ஷா ஒழிப்பு
இன்று கை ரிக்ஷாக்களை தமிழ்நாட்டில் பார்க்க முடியாது. கம்யூனிச சித்தாந்தத்தை பேசி வரக்கூடிய மேற்கு வங்கத்தில்கூட இன்று கை ரிக்ஷா முறை உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் கை ரிக்ஷா இல்லாததற்கு காரணம் கலைஞர். மனிதனை மனிதனே இழுக்கக்கூடிய கொடுமை தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்று அதை ஒழித்தார். அதை ஒழிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டு தொழிலாளர்களை கலைஞர் நடுத்தெருவில் விடவில்லை.

பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு
அவர்களுக்கும் அதற்கு மாற்றாக சைக்கிள் ரிக்ஷாவை இலவசமாக வழங்கினார். இதற்காக தனது பிறந்தநாளை பயன்படுத்தினார். அதேபோல், பார்வை குறைபாடு உடையவர்களுக்கு, பார்வை இழந்தவர்களுக்கு இலவசமாக கண்சிகிச்சை முகாம் நடத்த தனது பிறந்தநாளை பயன்படுத்தினார். அடுத்து பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வை ஏற்படுத்த தொழுநோயாளிகளுக்கு வாழ்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக மறுவாழ்வு இல்லங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு நல்வாழ்வை ஏற்படுத்தித் தந்தார்கள்.

மாற்றுத்திறனாளிகள்
ஒரு காலத்தில் ஊனமுற்றோர்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தோம். ஏற்கனவே மனம் உடைந்து போயிருப்பவர்களை ஊனமுற்றவர்கள் என்று சொல்லக்கூடாது எனக்கூறி இந்தியாவிலேயே முதல் முறையாக ஊனமுற்றோர் என்ற வார்த்தைக்கு பதிலாக மாற்றுத் திறனாளிகள் என்ற வார்த்தையை ஏற்படுத்தி, அவர்களுக்கு மறுவாழ்வை தந்து அவர்களுக்கு என்னென்ன தேவைகள் என்பதை அறிந்து தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

நாட்டு மக்களுக்காக பிறந்தநாள்
இப்படி தனது பிறந்தநாளை தனக்காக கொண்டாடாமல், நாட்டு மக்களுக்காக, ஏழை எளியோருக்காக கொண்டாடினார் கலைஞர். அவர் இன்று நம்முடன் இல்லை என்று சொன்னாலும் அவரது எண்ணங்கள், உணர்வுகள், பேச்சுக்கள், எழுத்துக்கள் ஊனோடு, உதிரத்தோடு கலந்திருக்கிறது. அறிஞர் அண்ணா அவர்கள், "ஆட்சிக்கு வர வேண்டும், பதவிக்கு வரவேண்டும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி திமுக அல்ல.

புதிதாக கட்சி தொடங்கியவர்கள்
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டு மக்களுக்காக, ஏழை, எளியோருக்காக, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்காக பாடுபாடும் இயக்கம் திமுக என்றார்.' 1949 ல் திமுக தொடங்கப்பட்டவுடன் நான் தான் முதலமைச்சர் என்று அண்ணா சொல்லவில்லை. இன்று கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் அடுத்து நான்தான் முதலமைச்சர் என்று சொல்கிறார்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications