கவனிச்சிட்டு வர்றேன்.. "அவரை" விமர்சிக்க விரும்பல".. முதல்வர் ஸ்டாலினிடம் கருணாஸ் வைத்த கோரிக்கை
முதல்வர் ஸ்டாலினிடம் கருணாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்
சென்னை: "திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தின்போது, திமுக ஆட்சி அமைந்தால் மதுரை விமான நிலையத்திற்கு தேவர் ஐயாவின் பெயர் வைக்கப்படும் என தெரிவித்தார்.. அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும்" என்று கருணாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்று அதிமுக கூட்டணியில் இருந்தவர் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ்.. கூவத்தூர் சம்பவத்தில் அதிக அளவு பேசப்பட்டவர், சர்ச்சைகளுக்கு உள்ளானவர், சலசலப்பை ஏற்படுத்தியவர்.. சசிகலாவின் தீவிர ஆதரவாளராகவே கருதப்பட்டவர்.
ஜெயிலுக்குள் சசிகலா இருந்தபோதுகூட, எடப்பாடியாருக்கு முழு ஆதரவாக கருணாஸ் செயல்படாமல் இருந்ததே, சசிகலா மீதான விசுவாசத்திற்கு உதாரணமாக திகழ்ந்தது.. இதற்கு பிறகு அதிமுகவில் நடந்த தேர்தலின்போது 2 சீட்கள் கேட்டும் தரப்படவில்லை.

வன்னியர்கள்
ஆனால், தொடர்ச்சியாக அதிமுக அரசுக்கு 2 கோரிக்கைகளை வைத்தபடியே இருந்தார்.. ஒன்று, வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால், முக்குலத்தோர் சமூகத்துக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், எங்களது சமூகமும், பிற சமூகங்களைப்போல பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்... மற்றொன்று, மதுரை ஏர்போர்ட்டிற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்பதே அந்த கோரிக்கைகளாகும்.

திமுக ஆதரவு
ஆனால், சட்டசபை தேர்தல் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பே கருணாஸ் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினார்... அதன்பிறகு திமுகவுக்கு ஆதரவு என்று பேட்டி தந்துவிட்டு, கொஞ்ச நேரத்திலேயே அந்த ஆதரவை வாபஸ் வாங்கி கொண்டார்.. அதாவது அதிமுக, திமுக இரண்டிற்குமே அவர் ஆதரவு தரவில்லை.. பிரச்சாரமும் செய்யவில்லை.. பிறகு திடீரென ஒருநாள், மநீம கமல்ஹாசனை சென்று சந்தித்து பேசினார். அந்த சந்திப்பு எதற்கு என்று தெரியவில்லை.

சந்திப்பு
அதேபோல, சசிகலா சிறையில் இருந்து வந்ததுமே பல தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து பேசினார்கள்.. கருணாஸ் அப்போதே சென்று சசிகலாவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. இப்போது வரை சசிகலாவை சந்திக்கவே இல்லை.. காரணமும் தெரியவில்லை. இந்த சூழலில் மறுபடியும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார் கருணாஸ்.. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 220 வது குருபூஜையை முன்னிட்டு அவர்களது நினைவிடத்தில் கருணாஸ் அஞ்சலி செலுத்தினார்..

பிரச்சாரம்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ் சொன்னதாவது: "சமூக நீதி கட்சி என தெரிவித்துக்கொள்ளும் திமுக அரசு, சமூக நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்... எப்போதுமே முந்தைய அரசு ஒரு சாரருக்கு மட்டும் இட ஒதுக்கீடு செய்தது.. அதனை மாற்றி அனைத்து சமூகத்திற்குமான அரசாக செயல்பட வேண்டும்.. திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தின்போது, திமுக ஆட்சி அமைந்தால் மதுரை விமான நிலையத்திற்கு தேவர் ஐயாவின் பெயர் வைக்கப்படும் என தெரிவித்தார்.. அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

விமர்சனம்
சசிகலா பயணம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "அவர் சிறைச்சாலையில் இருந்து வரும்போதே அரசியல் பயணத்தை துவங்கிவிட்டார்.. அவர்களை பற்றி விமர்சனம் செய்ய விருப்பமில்லை.. திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.. பிறகு அது குறித்து விமர்சனம் செய்வேன்.. சட்டமன்றம் ஒரு வெட்டிமன்றமாக செயல்படுகிறது.. மக்கள் வரிபணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை தங்களது என்று பேசி புராணம் பாடும் மன்றமாகவே செயல்படுகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications