தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசிடமிருந்து மாநில உரிமைகளை முதல்வர் ஸ்டாலின் மீட்க வேண்டும்: கருணாஸ்
சென்னை: தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசிடம் இருந்து மாநில உரிமைகளை டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் மீட்டு வர வேண்டும் என்று முக்குலத்தோர் புலிப்படைத்தலைவர் நடிகர் சேது. கருணாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சிவசங்கர் பாபாவின் லீலைகள் அடங்கிய 4 லேப்டாப்கள், 2 சிபியூக்கள், சிசிடிவி காட்சிகள் பறிமுதல்!
இது தொடர்பாக சேது. கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கடந்த மே 7 ஆம்தேதி முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த ஒரு மாத்திற்கு மேலான புதிய ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தும், அதை உடனடியாக செயல்படுத்தியும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் மத்தியில் நல்லாட்சிக்கான வரவேற்பையும் பெற்றுவருவது பாராட்டுக்குரியது. முக்குலத்தோர் புலிப்படை சார்பில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றப்பிறகு 17.06.2021 இன்று தமிழ்நாட்டின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி முதல் முறையாக டெல்லி சென்று பிரதமரை சந்திக்கிறார். கடந்த அ.இ.அதி.மு.க. ஆட்சியில், தமிழர் உரிமைகள் அனைத்தும் பறிபோய்விட்டன பா.ஜ.க. மத்திய அரசு தமிழ்நாட்டை கடுமையாக வஞ்சித்துவிட்டது. புதிய முதல்வராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்படும் .மு.க.ஸ்டாலின், ஏற்கெனவே இருந்த அ.இ.அ.தி.மு.க. அரசை போல் மத்திய அரசுக்கு எந்த சூழலிலும் வளைந்து கொடுக்காது தமிழ்நாட்டிற்குரிய உரிமைகளை கேட்டு பெறவேண்டும்.
கஜானாவை காலி செய்த அதிமுக
கடந்த ஆட்சி தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை - கஜானவை காலிசெய்துவிட்டுதான் சென்றது. ஆனாலும் அதையெல்லாம் கடந்து புதிய முதல்வர் ஸ்டாலின், வளர்ச்சிக்கான பாதையில் தமிழகத்தை அழைத்துச்செல்வது பாராட்டுக்குரியது. கொரோனா தொற்று பரவல் அதிகம் இருந்ததால், ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் தேவை குறித்து பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதங்கள் எழுதினார். செங்கல்பட்டில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி மையத்தை விரைவில் தொடங்குவது குறித்தும் கடிதம் எழுதினார்.
நீட் ரத்து, 7 தமிழர் விடுதலை
ஆகவே மத்திய அரசு தொடர்புடைய 'நீட்' தேர்வை ரத்து செய்யவேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடவேண்டும். 7 தமிழர் விடுதலையை காலம் தாழ்த்தாது உடனடியாக செயல்படுத்தவேண்டும். தற்போது தமிழ்நாட்டின் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜி.எஸ்.டி. பாக்கித்தொகையான 12,000/- கோடி ரூபாயை உடனடியாக தரவேண்டும். தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை அளிக்க வேண்டும் .
பாரபட்சம் கூடாது
கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மருத்துவ பயன்பாட்டுக்கருவிகளுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும். தமிழ்நாட்டிற்கான கரோனா தடுப்பு மருந்துகளைகுறைக்காமல் வழங்கிடவேண்டும். தடுப்பு மருந்து வழங்குவதில் தமிழ்நாட்டிற்கு பாரபட்சம் காட்டுவதை மத்திய அரசு நிறுத்தவேண்டும்.
பெட்ரோல், டீசல் வரி குறைப்பு
பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைத்து பெட்ரோல் ரூ. 50க்கும், டீசல் விலை 40 க்கும் விற்பனை செய்ய கோரிக்கை வைக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமரிடன் முதல்வர் ஸ்டாலின் பேச வேண்டும். தமிழ்நாட்டிற்கான உரிமையை விட்டுக்கொடுக்காது மீட்டுவரவேண்டும் என முதல்வர் ஸ்டாலினை முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சேது.கருணாஸ் தெரிவித்துள்ளார்.