Exclusive: நான் திருமணம் செய்து கொள்ளாதது... அம்மாவுக்கு மிகப்பெரும் கவலையை தந்தது -ஜோதிமணி எம்.பி.
சென்னை: அரசியலில் கஷ்டப்பட்ட போதெல்லாம் தன்னுடன் இருந்த அம்மா, இன்று நல்ல நிலையில் தாம் இருப்பதை பார்ப்பதற்கு உயிரோடு இல்லை என வருத்தம் தோய்ந்த குரலில் கூறுகிறார் கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி.
இன்று உலக அன்னையர் தினம் என்பதால் ஜோதிமணி எம்.பியிடம் அவரது அம்மாவின் நினைவுகள் மற்றும் பெருமைகள் பற்றி ஒன் இந்தியா தமிழ் சார்பாக தொடர்பு கொண்டு பேசினோம்.
மிகவும் உற்சாகமாக தனது அம்மாவின் நினைவுகளையும், சிறப்பையும் ஜோதிமணி எம்.பி. பகிர்ந்துகொண்டார். அதன் விவரம் பின்வருமாறு;
தாயில்லாமல் நாமில்லை.. தாயின்றி எவரும் பிறந்ததில்லை.. அன்னையர் தினம் இன்று..
பிறர் உரிமை
''எனது அம்மாவை பொறுத்தவரை நகைச்சுவை உணர்வுமிக்கவர். வீட்டில் நானும் அவரும் அடிக்கடி ஒருவரை ஒருவர் கேலி கிண்டல் செய்துகொள்வோம். அடுத்தவர்கள் உரிமையில் தலையிடாதவர். அதற்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன், நான் பள்ளி படிக்கும் காலத்தில் ஊரில் இருந்து எனது பெயருக்கு அப்புச்சி(தாத்தாவை சொல்கிறார்) கடிதம் அனுப்புவார். அந்த கடிதத்தை தபால்காரரிடம் வாங்கும் எனது அம்மா அதை பிரிக்காமல் வைத்திருந்து பள்ளியில் இருந்து வந்த பின்பு என்னிடம் கொடுப்பார்.
வீட்டில் பஞ்சாயத்து
நான் சிறுவயதில் ஊர் வம்பை இழுத்துக்கொண்டு வருவேன். கூட விளையாடுபவர்கள் மீது பந்தை எறிவது, அடித்துவிடுவது, இப்படி பல பஞ்சாயத்துக்கள் வீட்டில் வரிசை கட்டி நிற்கும். என்னை அழைத்து அதட்டுவாரே தவிர அடிக்கமாட்டார். சிறுவயது சுட்டித்தனம் என எண்ணி மிரட்ட மட்டுமே செய்வார். நான் ஒரு சுதந்திரப் பறவையாக தான் எங்கள் வீட்டில் வளர்ந்தேன்.
அம்மாவுக்கு விருப்பமில்லை
எங்கள் ஊர் கரூர் மாவட்டம் பெரிய திருமங்கலம் அருகே உள்ள கூடலூர் மேற்கு கிராமம். நான் முதன் முதலில் 1996-ல் ஒன்றியக் கவுன்சிலருக்கு போட்டியிட்டேன். அம்மாவுக்கு நான் அரசியலுக்கு வருவதில் துளியும் விருப்பமில்லை. அரசியலுக்கு செல்ல வேண்டாம் என எவ்வளவோ எடுத்துக் கூறினார். இது மட்டுமல்லாமல் எனது உறவினர்கள் ஒரு மாதத்திற்கு எங்கள் வீட்டிற்கு தினமும் வந்து வேண்டாம் ஜோதிமணி அரசியல் லாயக்கு படாது என மூளைச்சலவை செய்தனர். ஆனால் நான் எனது முடிவில் உறுதியாக நின்றதை கண்டு அம்மா கடைசியில் என்னை ஆசிர்வதித்து அரசியலுக்கு அனுமதித்தார்.
ஏச்சுபேச்சு
அரசியலில் எவ்வளவு ஏச்சு பேச்சுக்கள் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். ஒரு கட்டத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் விவகாரத்தில் ஒரு சிலர் என்னை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்து இழிவுபடுத்தினர். இதனால் மனம் உடைந்து வீட்டில் அழுதுகொண்டிருந்த என்னிடம், முன் வைத்த காலை பின் வைக்கக்கூடாது, வேண்டாம் என்று சொன்னேன் அரசியலுக்கு செல்வேன் எனக் கூறினாய். இப்போது இங்கு அமர்ந்து அழுதால் எல்லாம் சரியாகிவிடுமா ஆக வேண்டிய பணிகளை கவனி என தைரியமூட்டினார்.
வேதனை
அம்மா கொடுத்த அந்த தைரியம் தான் அன்று காவல் நிலையம் சென்று புகார் அளித்து குடிநீர் குழாய் அமைக்கும் விவகாரத்தில் வெற்றி பெற்றேன். அரசியலில் நான் ஒன்றுமில்லாமல் கஷ்டங்களை மட்டுமே அனுபவித்த போதெல்லாம் அம்மா என்னுடன் இருந்தார். ஆனால் இப்போது ஒரு எம்.பியாக நான் நிற்கும் தருணத்தில் அதை பார்ப்பதற்கு அம்மா இல்லையே என நினைக்கும் போது ஒரு வித வெறுமையும், வேதனையும் மனதை வதைக்கிறது.
திருமணம் விவகாரம்
டெல்லியில் எம்.பி.களுக்கு அரசு சார்பில் கொடுக்கப்படும் இல்லம் அண்மையில் தான் எனக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் நான் அங்கு இன்னும் செல்லவில்லை. அங்கே அம்மா இல்லாமல் பால்காய்ச்சி எப்படி குடிபுகுவது என எனது மனசாட்சி கேட்கிறது. எனது அம்மாவுக்கு இருந்த ஒரே வருத்தம் என்னவென்றால் நான் திருமணம் செய்துகொள்ளவில்லையே என்பது தான். ஆனால் நான் பொதுவாழ்க்கைக்கு வருவதாக முடிவெடுத்தவுடனே திருமணம் செய்துகொள்ள போவதில்லை என அம்மாவிடம் தெரிவித்துவிட்டேன். ஆனாலும் இதனை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இந்த வருத்தம் அம்மாவுக்கு இருந்துகொண்டே இருந்தது.
அன்னையர் தினம்
அம்மா மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் எனது அம்மா என்னுடனேயே இருப்பதை போல் தான் இதுவரை உணர்ந்து வருகிறேன். அவரை நினைக்காத நாளில்லை; வணங்காத நாளில்லை. இந்த சூழலில் உலகின் அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை ஒன் இந்தியா தமிழ் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்''.