விஜய் வந்தாலே மாநாடு தான்.. ஆவணங்களை ஏற்க முடியாது! மனசாட்சிப்படியே உத்தரவிடுவேன் என்ற நீதிபதி
கரூர்: விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது தவெக தரப்பிடம் பல்வேறு கேள்விகளை நீதிபதி எழுப்பினார். விஜய் கலந்து கொண்டாலே அது மாநாடு தான் என கூறிய நீதிபதி, எந்த ஆவணங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மனசாட்சிப்படி தான் உத்தரவு பிறப்பிப்பேன் எனக் கூறி வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற நடிகர் விஜய்யின் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக இதுவரை 41 பேர் உயிரிழந்தனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் உள்ளனர் என்பதால் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக, கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இன்று இருவரும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக, நீதிபதி பரத்குமார் அவர்களை விசாரித்தார்.

உங்களை யாரும் அடித்தார்களா என நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில், இருவரும் இல்லை எனத் தெரிவித்தனர். பின்னர் அரசு தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் தண்டபாணி ஆஜராகி மூலம் தனது வாதங்களை முன்வைத்தார்.
அதில்," கரூரில் போலீஸார் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றினர். ஆனால் தவெக நிர்வாகிகள் பின்பற்றவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது. இதனால், சிலரை மேலும் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறினார். அதே சமயம், தவெக தரப்பின் வழக்கறிஞர்", தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை நியமித்து விசாரணை நடத்த உள்ளது. அந்த ஆணையின் முடிவுவரை யாரையும் கைது செய்யக் கூடாது" என்றர்.
விஜய் பிரசாரத்திற்கு வந்த மக்கள் தன்னிச்சையாக வந்தனர்; யாரையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு வரவில்லை. மேலும், பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதி, லைட் ஹவுஸ் பகுதி மற்றும் உழவர் சந்தை பகுதியிலிருந்து கூட்டம் நடைபெற வேண்டும் என திட்டமிட்டிருந்தோம். ஆனால் போலீஸார் அனுமதி வழங்கவில்லை. குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கூட்டம் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டதால் நெரிசல் ஏற்பட்டது என கூறினார்.
காலாண்டு விடுமுறை மற்றும் வார விடுமுறை என்ற சூழ்நிலையில, குறைந்த அளவு கூட்டம் வரும் என எப்படி கணக்கிட்டீர்கள் என கேள்வி எழுப்பியதோடு, விஜய் வந்தாலே மாநாடு போல தான் பத்தாயிரம் பேர் தான் வருவார்கள் என நீங்கள் எப்படி முடிவு செய்தீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினார். மேலும், இந்த வழக்கில் ஆவணங்களின் அடிப்படையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க போவதில்லை எனக் கூறிய நீதிபதி, மனசாட்சிப்படி தான் உத்தரவு பிறப்பிப்பேன் எனக் கூறி வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications