என் புருசனை பார்க்கணும் விடுங்க.. கதறி அழுத நிறைமாத கர்ப்பிணி.. கரூர் நெரிசலில் துயரம்
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் தொடங்கி தேசியளவில் பல தலைவர்களும், மக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிவாரணம் வழங்கி ஆதரவு கரமும் நீட்டி வருகிறார்கள். இந்நிலையில் கரூரில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் தன்னுடைய இளம் கணவரை இழந்துள்ளார். தன் கணவனின் உடலை பார்த்து கர்ப்பிணி பெண் கதறி துடிக்கும் சம்பவம் காண்போரை கலங்க செய்துள்ளது.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல மக்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் என்று பலதரப்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலங்கிய கர்ப்பிணி பெண்
இந்தியாவில் ஒரு அரசியல் கூட்டத்தில் இவ்வளவு பெரிய விபத்து நிகழ்ந்திருப்பது இதுவே முதல்முறையாகும். கரூர் துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை இழந்த பெற்றோர், பெற்றோரை இழந்து நிற்கும் குழந்தைகள் என்று திரும்பிய பக்கமெல்லாம் சோக காட்சிகள் நிறைந்துள்ளன. அந்த மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிவாரணம் அறிவிக்கப்பட்டு வருகிறது.
விஜய்யின் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி நிறை மாத கர்ப்பிணியின் கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பகுதியைச் சேர்ந்தவர் தாரைக்கண்ணன் (வயது 26). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணமாகி தீபா (வயது 23) என்கிற மனைவி உள்ளார். தீபா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
கதறி துடித்த சோகம்
சமீபத்தில் தான் தீபாவுக்கு உறவினர்கள், நண்பர்கள் சூழ வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இதையடுத்து தீபா தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். விஜய்யை பார்ப்பதற்காக, தாமரைக்கண்ணன் நேற்று கரூர் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசலில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் அவர்களின் குடும்பத்தினரையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேதப் பரிசோதனைக்கு பிறகு தாமரைக்கண்ணன் உடல் அவரின் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது உறவினர்கள் கதறி அழுதுள்ளனர். முக்கியமாக மனைவி தீபா தன் கணவனின் உடலை பார்த்து துடிதுடித்து சத்தம் போட்டு அழுதார். ஒருகட்டத்தின் அவர் மயக்கமும் போட்டு விழுந்தார். தீபா கர்ப்பமாக இருப்பதால் அவரின் உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்து செல்ல முயற்சி செய்தனர்.
ஆனால் தீபா, என் புருசுனை பார்க்கணும்.. என்னை விடுங்க என்று கதறி துடித்தார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவரின் உறவினர்கள் அங்கிருந்து அழைத்து சென்றனர். இது அந்த கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது. இந்த வீடியோ வெளியாகி காண்போரை கலங்கடிக்க செய்துள்ளது.












Click it and Unblock the Notifications