வேலைக்குன்னு சொல்லி கையெழுத்து வாங்கிட்டாங்க! சிபிஐ விசாரணைக்குனு எனக்கு தெரியாது! கரூர் செல்வராஜ்
கரூர்: வேலை நிமித்தமாக கையெழுத்து போடச் சொன்னதால் போட்டேன். மற்றபடி இந்த கையெழுத்தை பெற்றதே உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக்கு மனுத்தாக்கல் செய்யத்தான் என்பது எனக்கு தெரியாது என கரூர் கூட்ட நெரிசலில் மனைவியை இழந்த செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வேலை நிமித்தமாக கையெழுத்து போடச் சொன்னதால் போட்டேன். எனது பெயரில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது எனக்கு தெரியாது.

எனது பெயரில் மனு தாக்கல் செய்து யாரோ மோசடி செய்துள்ளனர். எனவே எனது பெயரில் தொடரப்பட்ட மனுவை ரத்து செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் கோரியுள்ளேன். இதற்காக நான் சட்ட உதவி மையத்தை நாடியுள்ளேன். என்னை யாரும் கட்டாயப்படுத்தி சட்ட உதவி மையத்தை அணுக சொல்லவில்லை என செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கில் தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி செந்தில் குமார், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தவெக, பாஜக, இறந்த சிறுவனின் தந்தை பன்னீர் செல்வம், இறந்த பெண்ணின் கணவர் செல்வராஜ் உள்ளிட்டோர் சார்பில் 5 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது "எனது மகன் பிரித்திக்கின் இறுதி சடங்கில் பங்கேற்றதால் என்னால் வழக்கு தொடர முடியவில்லை, அதனால் இப்போது தொடர்ந்தேன்" என்றார்.
இந்த வழக்கு குறித்து தகவலறிந்த பன்னீர் செல்வத்தின் மனைவி ஷர்மிளா, செய்தியாளர்களை அழைத்து, "என் கணவர் பன்னீர் செல்வம், என்னை விட்டு பிரிந்து 8 ஆண்டுகள் ஆகிறது. எனது மகனின் இறுதி சடங்கில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை. என் மகனின் வயதை கூட அவர் தவறாகவே குறிப்பிட்டுள்ளார்.
அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. எனவே அவருக்கும் என் மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பணத்திற்காக அவர் இது போன்ற ஒரு வழக்கை தொடர்ந்துள்ளார்" என ஷர்மிளா தெரிவித்திருந்தார்.
அது போல் செல்வராஜும் தனது பெயரில் யாரோ வழக்குப் பதிவு செய்துள்ளதாக முறையிட்டார். இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு செல்வராஜும் ஷர்மிளாவும் வீடியோ மூலம் ஆஜராகி நடந்தவற்றை தெரிவித்தனர். இந்த போலி மனு விவகாரத்தில் தேவைப்பட்டால் சிபிஐ விசாணைக்கு உத்தரவிடப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications