Karur Stampede: தவெக விஜய் பிரச்சாரத்துக்கு தடை கோரிய வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை இல்லை
சென்னை: தவெக தலைவர் விஜய் மேற்கொள்ளும் பிரச்சாரத்திற்கு தடை கோரி, கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று மாலை 4.30 மணிக்கு அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனு மீது இன்று விசாரணை இல்லை. தவெக தாக்கல் செய்த வழக்கில் இடையீட்டு மனுவாக தாக்கல் செய்ய உள்ளதால் நீதிபதி சதீஷ்குமார் தான் விசாரிக்க முடியும் என உயர்நீதிமன்ற பதிவுத்துறை தகவல் அளித்துள்ளது.
கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் விஜய் பிரச்சாரத்துக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக, வாரம்தோறும் சனிக்கிழமைகளில், பிரசாரம் செய்ய நடிகரும், தவெக தலைவருமான விஜய் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் சனிக்கிழமையான நேற்று (செப்டம்பர் 27) கரூரில் தேர்தல் பிரசாரத்தில் விஜய் பங்கேற்று பேசினார்.
விஜய், கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று பகல் 12 மணியளவில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரை காண நேற்று காலை முதலே அந்த கட்சியின் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர். இதனையடுத்து நடந்த கூட்ட நெரிசல் காரணமாக ஏராளமானவர்கள் மயங்கி விழுந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் சுமார் 6 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், சிறுமிகள்.
விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் 10 பேர் குழந்தைகள் ஆவர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு தடை கோரி, கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த செந்தில் கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக இன்று விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 28) மாலை நீதிபதி செந்தில் குமார் முன்பாக விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கு விசாரணை முடியும் வரை தவெக மற்றும் அந்த கட்சித் தலைவர் விஜய் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என செந்தில் கண்ணன் என்பவர் தொடர்ந்த மனு மீது இன்று விசாரணை இல்லை. தவெக தாக்கல் செய்த வழக்கில் இடையீட்டு மனுவாக தாக்கல் செய்ய உள்ளதால் நீதிபதி சதீஷ்குமார் தான் விசாரிக்க முடியும் என உயர்நீதிமன்ற பதிவுத்துறை தகவல் அளித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு, நீதிமன்றம் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து, அடுத்த வாரம் நடைபெற இருந்த தனது பிரசார பயணத்தை விஜய், ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும், தனது கட்சி நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சென்னை நீலாங்கரை இல்லத்தில் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே, இந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை என தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் இணை பொதுச் செயலாளர் உட்பட 4 பேர் மீது கரூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications