கரூர் கூட்ட நெரிசல்.. வாக்கி டாக்கி மூலமாக தவெகவினருக்கு கூறினோம்.. சிபிஐயிடம் எஸ்பி சொன்ன பதில்!
டெல்லி: கரூர் கூட்ட நெரிசலுக்கு தமிழக அரசின் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளே காரணம் என்று சிபிஐ விசாரணையில் தவெக நிர்வாகிகள் முன் வைத்த குற்றச்சாட்டுக்கு, கரூர் மாவட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கூட்ட நெரிசல் குறித்து வாக்கி டாக்கி மூலமாக தவெக நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டதாக தகவல் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிபிஐ விசாரணை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணித்து வருகிறது.

ஏற்கனவே முதற்கட்ட விசாரணையை கரூரில் மேற்கொண்டுவிட்ட சூழலில், அடுத்தக்கட்ட விசாரணையை சிபிஐ டெல்லியில் தொடங்கி இருக்கிறது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, துணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் 2ஆம் நாளாக டெல்லியில் ஆஜராகி இருக்கின்றனர்.
அதேபோல் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு மற்றும் மாவட்ட காவல்துறையும் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறது. இந்த விசாரணையின் போது தவெக நிர்வாகிகள் தரப்பில், கரூர் கூட்ட நெரிசலுக்கு திமுக அரசுதான் காரணம். கரூரில் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்று தடுத்து நிறுத்தி இருந்தால், இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.
கரூர் கூட்ட நெரிசலுக்கு தமிழக அரசின் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளே காரணம். தவெக தலைவர், நிர்வாகிகளின் வாகனங்களை வழிநடத்தியதே காவல்துறை தான் என்றும் கூறி இருக்கின்றனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் கூட்ட நெரிசலுக்கான காரணம் குறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர்.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மட்டுமே அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ளது. விதிகளுக்கு புறம்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல் கூட்ட நெரிசல் குறித்து வாக்கி டாக்கி மூலமாக தவெக நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கைப்பற்றப்பட்ட வீடியோ காட்சிகள் கொண்டு சிபிஐ அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர். தவெக நிர்வாகிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மாவட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் சிபிஐ அடுத்தக்கட்டமாக எந்த கோணத்தில் விசாரணை மேற்கொள்ளும் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications