Arrest vijay: கரூரில் காற்றோடு கலந்த உயிர்கள்.. நடிகர் விஜயை கைது பண்ணி ஜெயில்ல போடுங்க! பறந்த கோரிக்கை!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் மரணம், நடிகர் விஜயை கைது செய்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்," கரூரில் இன்று நடைபெற்ற தவெக தலைவர் விஜய் அவர்களின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள், ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர்.
இன்னும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அங்கிருந்து வரும் தகவல்கள் மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது.

தமிழக அரசியல் வரலாற்றில் கறுப்பு தினமாக அமைந்த இந்நாளில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள், அத்துடன் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்தோர் குடும்பத்தினருக்கு இதுவரை ஒரு அனுதாப, ஆறுதல் செய்தி கூட வெளியிடாமல் இருப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற நேரில் செல்ல முயற்சி செய்யாத நடிகர் விஜய் அவர்களுக்கு கடும் கண்டனங்கள்.
அண்டை மாநிலமான ஆந்திராவில் புது திரைப்பட வெளியீட்டு சமயத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர் ஒருவர் மரணமடைந்த போது அப்படத்தின் கதாநாயகனான நடிகர் அல்லு அர்ஜுனா கைது செய்யப்பட்டது போல் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைய காரணமாக இருந்த பிரச்சார கூட்டத்தின் கதாநாயகனான நடிகர் விஜய் அவர்களும் கைது செய்யப்பட்டு உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இந்த துயர சம்பவத்தில் மரணமடைந்தோரின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் அவர்கள் தலா 25லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதோடு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு உயர்தர சிகிச்சை பெறுவதற்கான முழு செலவையும் அவர் ஏற்க வேண்டும், அத்துடன் இந்த துயர சம்பவத்திற்கு நடிகர் விஜய் அவர்கள் தமிழக மக்களிடையே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.
பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் விடுமுறை நாளான சனி, ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களில் தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை திட்டமிட்டு மேற்கொண்ட நடிகர் விஜய் அவர்கள் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்யும் இடத்திற்கு குறித்த நேரத்திற்கு செல்லாமல் பலமணி நேரம் கடந்து சென்றதும், அவர் பேசும் இடத்தில் கூடுகின்ற கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாததும் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட ஒரு காரணமாக இருந்திருக்கலாம் அல்லது அந்த கூட்டத்தில் திட்டமிட்டு நெரிசலை உருவாக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தி தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்த எவரேனும் திட்டமிட்டு சதிச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்கிற மிகப்பெரிய சந்தேகம் எழுகிறது.
எனவே சென்னை, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த துயர சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிடவும், இந்த துயர சம்பவத்தால் அரசுக்கு ஏற்படும் செலவினங்களை நடிகர் விஜய் அவர்களிடமிருந்து வசூலிக்கவும், இனி வருங்காலங்களில் அரசியல் பிரச்சார கூட்டத்தில் இது போன்ற உயிரிழப்புகள் நடப்பதை தடுக்கும் வகையில் அவரது பிரச்சார பயணத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவோ அல்லது நிரந்தரமாக தடை விதிக்கவோ ஆவண செய்திட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் மாண்பமை பொருந்திய நீதிமன்றத்தை கேட்டுக் கொள்கிறது." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications