பாம்பு தினேஷ் கதை தெரியுமா? சென்னை காசிமேடு பாலியல் கேஸ்.. தவெக விஜய்யின் காதுக்கு போனதா
சென்னை: தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கத் தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, அவரது சொந்தக் கட்சியினரே பெரும் தலைவலியைத் தரத் தொடங்கியுள்ளனர். "பெண்களுக்குப் பாதுகாப்பு" என்பதைத் தனது அரசியல் முழக்கங்களில் ஒன்றாக முன்வைக்கும் விஜய்யின் நம்பிக்கைக்கு வேட்டு வைக்கும் வகையில், சென்னை காசிமேட்டில் நடந்த கொடூரச் சம்பவம் கட்சித் தலைமையைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, காசிமேடு சிங்காரவேலன் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

காசிமேடு பாலியல் கேஸ்
கடந்த 23-ம் தேதி அங்கு விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த த.வெ.க. 43-வது வார்டு வட்டச் செயலாளர் தினேஷ் (என்கிற பாம்பு தினேஷ்) தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும், இதுகுறித்து வெளியில் சொன்னால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியும் உள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தனது சித்தியிடம் நடந்தவற்றைச் சொல்ல, ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகப் பணியில் இருந்த தினேஷை, நேற்று இரவு போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடரும் பாலியல் சர்ச்சைகள்
த.வெ.க. நிர்வாகிகள் மீது பாலியல் புகார்கள் எழுவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே திருவள்ளூர் த.வெ.க. வேட்பாளர் அருண்குமார் மீது நடிகை சாந்தினி கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதுமட்டுமன்றி, பூந்தமல்லி தொகுதி வேட்பாளர் பிரகாசம் என்பவர் மீதும் அதே கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் சீண்டல் புகாரை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நேரில் சென்று அளித்தார்.
இந்த விவகாரத்தில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், சம்பந்தப்பட்ட பெண் நிர்வாகி 6 மாதங்களுக்கு முன்பே கட்சித் தலைமையிடம் புகார் அளித்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவருக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டதுதான். இது கட்சி நிர்வாகத்திற்குள் மகளிர் பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
வாக்குறுதியும் & யதார்த்தமும்
தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கத் தயாராகி வரும் விஜய், தனது அரசியல் மேடைகளில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம் என்று தொடர்ந்து வாக்குறுதி அளித்து வருகிறார். ஆனால், அவர் தலைமையிலான கட்சியில் இருக்கும் நிர்வாகிகளே போக்சோ போன்ற கொடூரமான வழக்குகளில் சிக்கி வருவது கட்சியின் பிம்பத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மக்களின் நம்பிக்கையை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர விரும்பும் ஒரு கட்சி, தன் வீட்டு வாசலிலேயே நடக்கும் இத்தகைய அநீதிகளை எப்படிக் கையாளப் போகிறது என்பதே இப்போதுள்ள மிகப்பெரிய கேள்வி.
அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று இதனை மடைமாற்றம் செய்யாமல், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கி, கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
களையெடுப்பு அவசியம்
அடுத்தடுத்து வரும் இத்தகைய புகார்களைத் த.வெ.க. தலைமை மெத்தனமாகக் கையாண்டால், அது பெண்களின் பாதுகாப்பு குறித்த அக்கட்சியின் வாக்குறுதிகள் மீதான நம்பகத்தன்மையைச் சிதைத்துவிடும். அத்துடன், பொதுவெளியில் கண்டனங்களைப் பதிவு செய்வதும், கட்சிக்குள் களையெடுப்பதும் மட்டுமே கட்சியின் எதிர்கால நலனுக்கு உதவும்.
தமிழக அரசியல் களத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டுவரத் துடிக்கும் ஒரு இயக்கம், தன் நிர்வாகிகளின் ஒழுக்கக் குறைபாடுகளை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், அது மிகப்பெரிய அரசியல் சரிவைச் சந்திக்க நேரிடும் என்பது நிதர்சனம்...!!!












Click it and Unblock the Notifications