கவரைப்பேட்டை ரயில் விபத்து.. கவனக்குறைவாக ரயிலை இயக்குதல், அலட்சியமான பணி உள்பட 4 பிரிவுகளில் வழக்கு
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கவனக்குறைவாக ரயிலை இயக்குதல், அலட்சியமான பணி, கவனக்குறைவாக இருந்து காயத்தை ஏற்படுத்துதல் , ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் கடந்த மாதம் 11-ந் தேதி இரவு சரக்கு ரயில் மீது பாகுமதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. மெயின் வழியில் செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் லூப் வழியில் சென்றதே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்தனர். நல்ல வேளையாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இதைத்தொடர்ந்து, தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் நேரில் வந்து தீவிர ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தண்டவாளம், சிக்னல், கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றில் ஆய்வு நடத்தினார். இதேபோல, தண்டவாளத்தில் 'நட்டு, போல்டு' ஆகியவை காணாமல் போனது குறித்தும் ஆய்வு நடத்தினார்.
இந்த விபத்து தொடர்பாக தெற்கு ரெயில்வேயில் உள்ள 13 பிரிவுகளை சேர்ந்த பல்வேறு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தெற்கு ரயில்வே சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வந்தார்கள். குறிப்பாக, பாகுமதி எக்ஸ்பிரஸ் ரயில் பைலட், துணை பைலட், கவரைப்பேட்டை ரயில் நிலைய மேலாளர், மோட்டார் மேன், கவரைப்பேட்டை சிக்னல் ஆப்ரேட்டர்கள், நிலைய கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் துறை ரீதியான விசாரணை நடத்தினார்கள்.
இது ஒருபுறம் எனில்,கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்வே போலீசார் நாசவேலைக்கான சதி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 'நட்டு' மற்றும் 'போல்டு' மாயமானதால் கவரைப்பேட்டையை சுற்றியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட பழைய இரும்பு வாங்கும் கடைகளில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி உள்ளார்கள். இதுவரையில் மொத்தம் 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது.
இந்த நிலையில், கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக மேலும் 4 பிரிவுகளின் கீழ் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதாவது, கவனக்குறைவாக ரயிலை இயக்கி மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் (பிரிவு 281), கவனக்குறைவாக இருந்து காயத்தை ஏற்படுத்துதல் (125 'ஏ') மற்றும் அலட்சியமான பணி (125 'பி'), ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் ஆபத்தை விளைவித்தல் (154) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக, ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி நடத்தி வந்த விசாரணை முடிந்துவிட்டது. நேற்று மத்திய ரயில்வே வாரியத்திடம் அறிக்கையை அவர் சமர்பித்தார். இந்த அறிக்கை விவரம் விரைவில் வெளியாகும் என தகவல்ககள் வெளியாகி உள்ளது. இந்த விவரம் வெளியானால் மட்டுமே ரயில் விபத்து சதி காரணமாக நடந்ததா அல்லது சிக்னல் கோளாறு காரணமாக நடந்ததா அல்லது லோகோ பைலைட்டின் அலட்சியம் காரணமாக நடந்ததா என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications