அதிமுகவில் “புரட்சிப்படை”.. எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா மூவரையும் சந்திக்க போகிறோம்.. கேசிபி அறிவிப்பு!
சென்னை: அதிமுக ஒன்றுபட்டு உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரையும் சந்தித்துப் பேச உள்ளதாக அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ உடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்தித்தது அதிமுக. அதிமுக நேரடியாக 33 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய 2 கட்சிகளும் இரட்டை இலை சின்னத்திலேயே களம் கண்டன. தேமுதிக 5 தொகுதிகளில் போட்டியிட்டது.

அதேசமயம், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்தது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை மதுரை, தென் சென்னை, வேலூர், நெல்லை, நீலகிரி, கோவை ஆகிய 6 தொகுதிகளில் பாஜக மூன்றாம் இடத்துக்கு தள்ளியது.
ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார் ஓ.பன்னீர்செல்வம். அங்கு ஓபிஎஸ்ஸுக்கு அடுத்த இடத்தில் அதிமுக 3வது இடம் பிடித்துள்ளது. தேனியில் போட்டியிட்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் 2வது இடம் பிடித்தார். அங்கும் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
தொடர்ச்சியாக தேர்தல்களில் அதிமுக தோல்வியைச் சந்தித்து வரும் நிலையில், அதிமுக ஒன்றிணைவை வலியுறுத்தி குரல்கள் வலுவடைந்துள்ளன. இந்நிலையில், ஓபிஎஸ் அணியில் இருந்து ஜேசிடி பிரபாகர், புகழேந்தி ஆகியோர் விலகியுள்ளனர். முன்னாள் எம்.எல்.ஏ ஜேசிடி பிரபாகர், முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி, பெங்களூர் புகழேந்தி ஆகியோர் இன்று கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
கேசி பழனிசாமி பேசுகையில், "நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவு அதிமுகவினருக்கு பேரிடியாக உள்ளது. இதற்கு முன்பும் கூட அதிமுக தோற்றுள்ளது. ஆனால், இவ்வளவு பெரிய வாக்கு வங்கி சரிவை கண்டதில்லை. வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது அதிமுக வாக்கு வங்கி.
இந்த தேர்தல் தரும் பாடம், ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க வேண்டும் என்பதுதான். இந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பெரும்பாலான அதிமுக தொண்டர்களும் தெரிவிக்கும் கருத்து, அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதுதான். அந்த அடிப்படையில் ஜேசிடி பிரபாகர், புகழேந்தி, நானும் கலந்து பேசி அதிமுகவை ஒற்றுமைப்படுத்தும் பணியை முன்னெடுக்க உள்ளோம்.
அதிமுக தலைவர்கள் தேசிய கட்சிகளுக்கு அடிபணிந்து செல்லக்கூடாது. அதிமுக ஒரு குடும்பத்தின் பிடியில் சென்றுவிடக்கூடாது. இவரை கட்சியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம், அவரைச் சேர்த்துக்கொள்ள மாட்டோம் எனச் சொல்லக்கூடாது. இந்த இயக்கத்தில் பயணிக்கும் ஒரு தொண்டரைக் கூட இழந்துவிடக்கூடாது.
இன்னொரு தோல்வியைத் தாங்குவதற்கு அதிமுக தொண்டன் தயாராக இல்லை. இன்னொரு தோல்வியை அடைந்தால் மக்கள் அதிமுக தலைவர்களை மதிக்கத் தயாராக இல்லை. இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, அதிமுக ஒன்றிணைய வேண்டும்.
எங்களது ஒரே நோக்கம் அதிமுக ஒன்றுபட்டு உருவாக்கப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரையும் சந்தித்துப் பேசுவோம். வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக ஆளுங்கட்சியாக உருவெடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் உங்கள் கருத்துகளை எங்கள் மூவரிடமும் தெரிவிக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications