ஜெ.,வுக்காக வாசலில் காத்திருந்த பிரதமர்.. ஆனா இப்போது? இபிஎஸ்-ஓபிஎஸ் மீது ‛அட்டாக்’.. கேசிபி சுளீர்
சென்னை: ‛‛ஜெயலலிதா காலத்தில், பிரதமரே ஆயினும் போயஸ் கார்டன் வாசலில் காத்திருந்து சந்தித்து சென்ற கம்பீரமான தலைமையை கொண்டது தான் அதிமுக. தற்போது ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரின் கடைக்கண் பார்வைக்கு முந்தி கொண்டு நிற்கும் சுயநலவாதிகள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினரால் அதிகவிற்கே அவப்பெயர். இருவரும் கட்சியை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டனர்'' என அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ பன்னீர் செல்வம் தரப்பும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இருதரப்பும் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகின்றனர்.
இந்நிலையில் இருதரப்பும் நேற்று சென்னையில் உள்ள கமலாலயத்துக்கு சென்று பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினர். இது தற்போது விவாதப்பொருளாகி உள்ள நிலையில் முன்னாள் எம்பியான கேசி பழனிச்சாமி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
4 பாயிண்ட்.. அப்படியே 'உல்ட்டா’.. ப்ளேட்டை திருப்பிப் போட்ட ஓபிஎஸ்.. பளீச்னு சொன்ன கேசிபி! அதேதானா?
பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா இருந்தார். இவர் சமீபத்தில் காலமான நிலையில் பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்புள்ளது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், ஓ பன்னீர் செல்வம் அணியும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது.
கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு
இதனால் இரட்டை சிலை சின்னத்துக்கு உரிமை கோரினால் அது முடக்கப்பட வாய்ப்புள்ளது. இது நடந்தால் சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிடும் சூழல் உருவாகும். இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவு முக்கியமானது. இதனால் இருதரப்பும் கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். நேற்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் சென்னை தி நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினர். அதன்பிறகு ஓ பன்னீர் செல்வம் தலைமையில் அவரது அணியின் கமலாலயம் சென்று பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினர்.
கேசி பழனிச்சாமி விமர்சனம்
எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் அடுத்தடுத்து ஆதரவு கோரியுள்ள நிலையில் பாஜவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது பற்றிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தான் பாஜக அலுவலகம் சென்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், ஓ பன்னீர் செல்வம் தரப்பும் ஆதரவு கேட்டுள்ளது தற்போது பேசும் பொருளாகி உள்ளது. இதுதொடர்பாக பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் முன்னாள் எம்பியும், எம்எல்ஏவுமான கேசி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பிரதமரே காத்திருந்தாரே
இதுபற்றி கேசி பழனிச்சாமி , ‛‛அம்மா காலத்தில், பிரதமரே ஆயினும் போயஸ் கார்டன் வாசலில் காத்ிருந்து சந்தித்து சென்ற கம்பீரமான தலைமையை கொண்ட அதிமுகவில் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரின் கடைக்கண் பார்வைக்கு முந்தி கொண்டு நிற்கும் சுயநலவாதிகள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினரால் அதிகவிற்கே அவப்பெயர் என தெரிவித்துள்ளார்.
பாஜகவிடம் அதிமுகவை அடகு வைத்தனர்
அதன்பிறகு மற்றொரு ட்விட்டில் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் அமர்ந்திருக்கும் போட்டோவை பகிர்ந்த கேசி பழனிச்சாமி, ‛‛அதிமுகவை வெற்றிகரமாக பாஜகவிடம் அடகு வைத்தபொழுது எடுக்கப்பட்ட படம்'' என கோபத்தை கொப்பளித்துள்ளார். இதுதவிர அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி, செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கமலாலயம் சென்ற போட்டோவை பகிர்ந்த கேசி பழனிச்சாமி, ‛‛அதிமுகவை பாஜகவிடம் ஒப்படைத்த பிறகு முன்னாள் அமைச்சர்கள் நிம்மதி பெருமூச்சு'' என சாடியுள்ளார்.
யார் இந்த கேசி பழனிச்சாமி
இப்படி கருத்து தெரிவித்துள்ள கேசி பழனிசாமிதான்அதிமுக சார்பில் காங்கேயம் தொகுதி எம்எல்ஏவாகவும், திருச்செங்கோடு எம்பியாகவும் இருந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இவர் தற்போது எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோரை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். இந்நிலையில் தான் தற்போது எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் அதிமுகவை, பாஜகவிடம் அடகு வைத்துவிட்டதாக அவர் கடுமையாக சாடியுள்ளார்.