சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலம் கீழடி..மத்திய அரசு கொடுத்த ஸ்வீட் செய்தி.. தங்கம் தென்னரசு பெருமிதம்!
சென்னை : சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது பத்தாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலா தினத்தில் வழங்கப்படும் 'சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை நான்காம் கட்டம் முதல் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு பத்தாம் கட்ட அகழாய்வுப் பணியினைச் செய்து வருகிறது.

கீழடியில் நகர நாகரிகம் நிலவியதைத் தொல்லியல் சான்றுகள் மூலம் நிலைநிறுத்தியது. கி. மு 6 ஆம் நூற்றாண்டளவில் எழுத்தறிவுப் பெற்ற சமூகமாக தமிழ்ச் சமூகம் விளங்கியது என்பதை கரிமப் பகுப்பாய்வு காலக்கணக்கீடு மூலம் முதன்முதலாக தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை நிறுவியது.
இதனை நூலாக வெளியிட்டு உலகறியச் செய்தது. நகர நாகரிகம் என்பதற்குப் பல்வேறுக் கூறுகள் உண்டு. வாழ்விடப்பகுதியின் பரப்பளவு, பல்வேறு மக்கள் ஒன்றுகூடி வாழ்தல், எழுத்தறிவு, செங்கல் கட்டுமானம், தொழிற்கூடங்கள், நீர்மேலாண்மை, நுண்கலைகள், வணிகம், பெருவழிகள், போன்றவை இக்கூறுகளில் அடங்கும். கீழடியில் இத்தகைய கூறுகளுக்கான தொல்பொருட்கள் கிடைத்துள்ளதன் வாயிலாக நகர நாகரிகம் நிலவியது என்று சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது.

கீழடியில் நீர்மேலாண்மை சிறந்து விளங்கியதற்கு பல்வேறுச் சான்றுகள் கிடைத்துள்ளன. அவற்றில் திறந்தவெளி வடிகால், செங்கல்லால் கட்டப்பட்ட மூடிய வடிகால், சுருள் வடிவிலான குழாய்கள், உருளை வடிவிலானக் குழாய்கள், பல்வேறு எண்ணிக்கைகளில் உறைகிணறுகள் போன்றவை வெளிப்படுத்தப்பட்டன. இவை பல்வேறு பயன்பாட்டுகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. சங்ககாலத் தமிழ்ச் சமூகம் கொண்டிருந்த நீர்மேலாண்மையின் சிறப்பினை அறிகிறோம்.
அதுமட்டுமில்லாமல் கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்கள் அங்குள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பட்டு, சுற்றுலா பயணிகள் பார்க்க அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலா தினத்தில் வழங்கப்படும் 'சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"உலகின் முன்னோடி இனமான பழந்தமிழர் நாகரிகத்தின் தொட்டிலாய் விளங்கும் கீழடியில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், ரூ. 18.8 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.

பழந்தமிழ் சமூகத்தின் முற்போக்கு சிந்தனைகள் பொருந்திய ஏறத்தாழ 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அருங்காட்சியகத்தை உள்ளம் குளிர கண்டு களிக்கின்றனர். இந்நிலையில், ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலா தினத்தில் வழங்கப்படும் 'சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது, திராவிட மாடல் அரசுக்குப் பெருமை!" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications