Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கீழடி விவகாரம்.. கையில் எடுத்த திமுக.. மத்திய பாஜக அரசை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் பாஜகவை கண்டித்து மதுரையில் வருகிற 18 ஆம் தேதி திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ்காந்தி அறிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் கீழடியில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, முதல் 3 கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொண்ட ஒன்றிய அரசு, ஆய்வுப் பணியை பாதியில் கைவிட்டது.

Keezhadi Row DMK Student Wing Plans Protest Against BJP in Madurai on June 18

கீழடி அகழாய்வு

அதனைத் தொடர்ந்து, மத்திய அரசு பாதியில் விட்ட பணியை கையில் எடுத்த தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை 9 கட்ட அகழாய்வு பணிகளை நிறைவு செய்துள்ளது. அதில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், 1 மற்றும் 2ஆம் கட்ட அகழாய்வு முடிவுகளை மத்திய அரசு வெளியிடாமல் உள்ளது. இதற்கு, பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசு காட்டம்

அண்மையில் அமைச்சர் தங்கம் தென்னரசு, "முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்துஆதாரம் போதவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது.

5350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் மத்திய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? தமிழர்களை எப்போதும் இரண்டாந்தர குடிமக்களாக வைத்திருக்க வேண்டும்என்ற தணியாத தாகத்தாலா?

மறந்துவிடாதீர்கள். வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காக காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்! பூனை கண்ணை மூடிக்கொண்டு விட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன?'' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மத்திய அமைச்சர் சொன்ன பதில்

இதையடுத்து, கீழடி அகழ்வராய்ச்சி தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, நாங்கள் எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை. உண்மையில், இதுபோன்ற ஆராய்ச்சிகள், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நாங்களும் தங்களுடன் சேர்ந்து பெருமைகொள்வோம். ஆனால் இன்றைய அறிவியல் உலகின் ஏற்றுக்கொள்ளலுக்கு, எங்களுக்கு இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை.

அதனால்தான், அகழ்வாராய்ச்சி தரவுகளை அரசியலாக்க அவசரப்படுவதற்குப் பதிலாக, அறிவியல் பூர்வமான கூடுதல்தரவுகள் கிடைக்கும் அளவிற்கு ஆராய்ச்சியினை தொடர விரும்பும் மத்திய அரசிற்கு ஆதரவளிக்குமாறு, தமிழ்நாடு அரசிடம் நாங்கள் கேட்டுக் கொண்டோம். தமிழ்நாடு அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழ்நாடு பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பிரிவினை உணர்வுகள் மூலம் அல்லாமல், நேர்மையான அறிவின் மூலம் அதன் பாரம்பரியத்தை பெருமைப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.

திமுக ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கீழடி என்கிற பெயரே பாஜக அரசுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. கீழடி ஆய்வை மேற்கொள்ளவே நீதிமன்றத்தை நாடவேண்டியிருந்தது. அகழாய்வை மேற்கொண்ட அதிகாரிகள் பாஜகவின் குரலாக ஒலிக்கவில்லை என்பதற்காக அவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள்.

கடந்தகால அடிமை எடப்பாடி அரசும் பாஜக-வினரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு கீழடி அகழாய்வைக் கிடப்பில் போட்டது. தமிழ்நாட்டில் கழகத் தலைவர் தலைமையிலான அரசு அமைந்ததும் கீழடி அகழாய்வுக்குப் புத்துயிர் கொடுத்ததோடு துரிதமாக பலகட்ட ஆய்வுகள் நடத்தி அருங்காட்சியகத்தையும் கட்டியெழுப்பினார்.

மதுரையில் மாணவரணி ஆர்ப்பாட்டம்

அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் தமிழர் விரோத பாஜக அரசைக் கண்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, வருகிற ஜூன் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு திமுக மாணவர் அணி சார்பில், மதுரை, விரகனூர் சுற்றுச்சாலையில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக மாணவர் அணியின் மாநில நிர்வாகிகள் - மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று, போராட்டத்தை வெற்றியடையச் செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+