கெஜ்ரிவாலை ஒழிக்க முடியாது! பாஜகவின் டெல்லி கனவு பலிக்குமா? உப்புசப்பு இல்லாத ஊழல் புகார் ?
சென்னை: அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை டார்கெட் செய்வது ஏன்? அதன் பின்னால் உள்ள அரசியல் என்ன?
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்று இரவு அமலாக்கத்துறை கைது செய்தது.
ஏற்கெனவே டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லியின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உட்பட இரண்டு அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணைக்காக ஆஜராகும்படி தொடர்ந்து கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சார்பாகப் பலமுறை சம்மன்கள் அனுப்பப்பட்டு வந்தன. அவர் தேர்தல் காலம் நெருங்கும் தருணத்தில் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்றே கணிப்புகள் வெளியாகின.
இந்நிலையில்தான் நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தை அரவிந்த் கெஜ்ரிவால் நாடியிருந்தார். ஆனால் கெஜ்ரிவாலின் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதனை அடுத்துத்தான் அதிரடியாக அவர் கைது செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து இந்தியா கூட்டணி தலைவர்கள் தங்களின் எதிர்ப்பை பதிய வைத்து வருகிறார்கள்.
"ஒரு பாலிசி மூலம் கொள்ளை அடித்துவிட முடியும்? அரசு ஒரு கொள்கையை வகுக்கலாம். கொள்கை அடிப்பதற்காகக் கூட ஒரு கொள்கையை வகுக்கலாம். இப்போது நாம் அதைப் பார்க்கிறோம்.
தேர்தல் பத்திர திட்டம் கூட அப்படித்தான். ஆனால், அரசு கொள்கை வகுத்துவிட்ட உடன் கொள்ளையடித்துவிட முடியாது. அதை நடைமுறைப் படுத்த வேண்டும். செயல்வடிவம் பெற வேண்டும்.
ஆனால் கெஜ்ரிவால் விசயத்தில் அமலாக்கத்துறை 10 ஆயிரம் கோடி இதில் ஊழல் நடந்துள்ளது என்றது. அதன்பிறகு 2 ஆயிரம் கோடி பணம் கைமாறிவிட்டது என்று குற்றஞ்சாட்டியது.
அதன்பிறகுதான் 10 ஆயிரம் கோடி என அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டுகிறது இல்லையா? அப்படி என்றால், அந்தப் பணத்தில் தொடர்புடையதாகச் சொல்லப்படும் 10 ரூபாயைக் காட்டுங்கள் என்று ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியது.
இதுதான் வாங்கிய லஞ்சப் பணம் என்று கண்டுபிடித்த ஆவணத்தைக் காட்டுங்கள் என்றது ஆம் ஆத்மி. இதற்கு எல்லாம் இதுவரை அமலாக்கத்துறையிடம் பதிலே இல்லை.
அப்புறம் திடீரென்று 45 கோடி கை மாறிவிட்டது என்றது அமலாக்கத்துறை சொன்னது. இந்த 45 கோடியில் 2.2 கோடி மணீஷ் சிசோடியா போய் உள்ளது என்றது. இன்னும் 2 கோடி வேறு நபருக்குச் சென்றுள்ளது.
சரி, 45 கோடியில் இந்தப் பணம் போக மீதி உள்ள தொகை எங்கே என்று கேட்டால், அந்தப் பணத்தைக் கோவா தேர்தலில் ஆம் ஆத்மி செலவு செய்துவிட்டது என்று அமலாக்கத்துறை விளக்கம் அளித்தது.
இப்படி ஊழல் பணத்தைப் பிடிக்காமலே இதுவரை ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டு வைத்து வருகிறது. இது எப்படி நியாயமாகும்?
அப்படி இருந்தும் கெஜ்ரிவாலைப் பிடித்துச் சிறையிலடைத்திருக்கிறார்கள். இவர்கள் ஏன் கெஜ்ரிவாலை டார்கெட் செய்கிறார்கள். ஏனென்றால், கெஜ்ரிவால் ஆட்சியில் ஊழலே நடைபெறாத ஆட்சியாக இருக்கிறது. உண்மை அதுதான். இது இன்று இல்லை என்றாலும், என்றைக்காவது ஒருநாள் நிரூபணமாகும். அதில் சந்தேகம் இல்லை.
ஊழலே செய்யாமல் அந்தக் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளது. அவர்கள் நிறையச் சலுகைகளை மக்களுக்குத் தருகிறார்கள். அதனடிப்படையில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுகிறார்கள். நான் அடித்துச் சொல்கிறேன். டெல்லியை ஆம் ஆத்மியை தவிர வேறு கட்சி ஆட்சிக்கு வர முடியாது.
மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனடியாக அதைச் சீர்செய்கின்ற ஆட்சி நிர்வாகத்தை நடத்துகின்ற ஒரே கட்சி ஆம் ஆத்மிதான். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஒரு மாதத்தில் தீர்க்கப்படும் என்பது உறுதி. அந்தளவுக்கு ஆட்சியை நடத்துகிறார்கள்.
ஆம் ஆத்மி தொடங்கியது முதல் இன்று வரை அந்தக் கட்சிக்கு யார் யார் நன்கொடை கொடுத்தார்கள் என்பதைக் கட்சியின் இணைய தளத்தில் தெளிவாக வெளியிட்டுள்ளார்கள் ஒளிவுமறைவு என்பதே இல்லை.
ஆனால், பாஜக இதுவரை தேர்தல் பத்திரம் மூலம் 8 ஆயிரம் கோடி வாங்கி உள்ளது. அந்தத் தகவல்களை அந்தக் கட்சி நீதிமன்றம் சொல்லும் வரை வெளியிடவில்லை. ஆம் ஆத்மி அப்படியில்லை. ஆகவேதான் பாஜகவுக்கு ஆம் ஆத்மி மீது எரிச்சல் வருகிறது.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஒரு பெண்மணி சொல்லி இருந்த வாசகம் மிகமிக முக்கியமானது. கெஜ்ரிவால் என்பது ஒரு ஐடியா. அந்த ஐடியாவை யார் நினைத்தாலும் சாகடிக்க முடியாது என்று. அதுதான் உண்மை.
கெஜ்ரிவாலின் அரசியல் பாணி என்பது இந்தியா முழுமைக்கும் விரைவில் வரப் போகிறது. இதுவரை கெஜ்ரிவால் ஆட்சியில் போடப்பட்ட பட்ஜெட் என்பது பற்றாக்குறை இல்லாத பட்ஜெட். அது எத்தனைப் பேருக்குத் தெரியும்?
அவர் ஒரு ஐஆர்எஸ் முன்னாள் அதிகாரி. அவருக்கு ஆட்சி நிர்வாகம் பற்றித் தெளிவாகத் தெரியும். அப்படிச் சிறப்பான நிர்வாகத்தை ஆம் ஆத்மி கட்சியினர் நடத்துகிறார்கள்.
அதனால்தான் பாஜக அவரை டார்கெட் செய்கிறார்கள். ஆனால் பாஜகவின் இந்தச் சதி வேலைகள் எல்லாம் நிறைய நாள் நிற்காது" என்கிறார்












Click it and Unblock the Notifications