ராகுல் காந்திக்கு தலைவலி.. கேரள முதல்வர் தேர்வில் மண்டையை பிய்த்து கொள்ளும் 3 பேர்.. இதுதான் காரணமா
சென்னை: கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 102 தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்குத் திரும்பியுள்ளது.. ஆனால் தேர்தல் முடிவு வெளியாகி 9 நாட்கள் ஆகியும் முதல்வர் யார் என்று இன்னும் தெரியவில்லை.. வெற்றி கிடைத்தும் ஆட்சி அமைக்க முடியாத நிலை காங்கிரசுக்கு படிப்படியாகச் சங்கடமாக மாறிவருகிறது.. என்னதான் நடக்கிறது கேரள அரசியலில்?
கேரள காங்கிரசில் முதல்வர் பதவிக்கு 3 பேர் போட்டியிடுகிறார்கள்.. கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கடந்த ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து தேர்தல் களத்தை வழிநடத்திய வி.டி. சதீசன், பல வருஷமாகவே கட்சியின் முதுகெலும்பாக இருந்த ரமேஷ் சென்னிதலா என இந்த மூவரும் பிடிவாதம் பிடிக்கிறார்கள்..

இந்த மூவரையும் சமரசப்படுத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் ராகுல் காந்தியும் திரும்பத் திரும்ப முயற்சி எடுக்கிறார்கள்.. எந்த முயற்சியும் இதுவரை பலன் தரவில்லை.. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக இருக்கிறது கேரள காங்கிரஸ் நிலைமை.
ராகுல் காந்தி விரக்தி?
நேற்று டெல்லியில் ராகுல் காந்தி கேரள தலைவர்களை அழைத்துத் தனியாக பேசினார்.. அதற்கு பிறகும் முடிவு வரவில்லை.. மூத்த தலைவர் கே.முரளீதரன், இது இப்படியே நீடித்தால் கட்சியினர் மட்டுமல்ல மக்களும் கோபப்படுவார்கள் என்று ராகுல் காந்தியிடம் நேரடியாக சொல்லியிருக்கிறார்.
கூட்டணி கட்சிகளும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளன.. வெற்றியின் உற்சாகத்தில் இருந்த தொண்டர்கள் தற்போது கடும் சோர்வில் இருக்கின்றனர்.. அதாவது கொண்டாட்டங்கள் முடிந்துவிட்டன, இப்போது குழப்பங்கள் தொடங்கிவிட்டன என்றே சொல்லலாம்.
முடிவெடுக்க முடியாமல் இவ்வளவு நாட்கள் இழுப்பது, காங்கிரஸ் தலைமையையே கேள்விக்குறியாக்கியுள்ளது.. யாரையாவது தள்ளி வைத்தால் அவர்கள் கட்சிக்கு எதிராக நடந்துகொள்வார்கள் என்ற பயத்தில் முடிவு தள்ளிப்போகிறது..
காங்கிரசுக்கு நெருக்கடி
நெருக்கடியான நேரத்தில் உடனே முடிவு எடுப்பதுதான் வலுவான தலைமையின் அடையாளம்.. அந்தத் துணிச்சல் இப்போது காங்கிரஸ் தலைமையிடம் சுத்தமாகத் தெரியவில்லை.. ஒரு முதல்வரைத் தேர்ந்தெடுக்க இத்தனை நாட்களா? என்கிற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துவிட்டது..
இந்தத் தாமதம் இன்னொரு பக்கத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.. ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் காட்டும் தயக்கம், தோல்வியடைந்த இடது கட்சிகளுக்கு விமர்சிக்க நல்ல வாய்ப்பை கொடுத்துவிடுகிறது.. தேர்தல் தோல்வியிலிருந்து மீண்டு வர முயலும் இடது கட்சிகள் இந்த இழுபறியை ஆயுதமாக பயன்படுத்திக் கொள்வதில் வியப்பில்லை.. ஆனால், வெற்றி பெற்ற கட்சி தன்னைத் தானே விமர்சனத்திற்கு உள்ளாக்கிக்கொள்வதுதான் மிகப்பெரிய அரசியல் தேக்கமாக பார்க்கப்படுகிறது..
இன்று முடிவு கிடைக்குமா
காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும்.. மக்கள் வாக்களித்தது தனிநபர்களுக்கு அல்ல, கட்சியின் கொள்கைகளுக்கும் மாற்றத்திற்கும்தான்.. வெற்றி என்பது கட்சிக்கும் மக்களுக்கும் சேர வேண்டியது, தனிநபர்களின் தேவையை திருப்திப்படுத்தவும் கிடையாது. தனிப்பட்ட அதிகாரப் போட்டிகளைத் தள்ளி வைத்துவிட்டு மாநிலத்தின் நலனை முன்னிறுத்தி விரைவில் முடிவெடுப்பதே காங்கிரசுக்கு சரியான முடிவாக இருக்கும்..
எனவே இன்னும் தாமதித்தால், இந்த வெற்றியின் தாக்கமே மங்கிப் போய்விடும்.. மக்கள் கொடுத்த வாய்ப்பை வீணாக்காமல் இருப்பதே இப்போது அவர்களுக்கு முன்னுள்ள முதல் கடமை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications