சுயமரியாதை இருந்தா அமித்ஷாவுக்கு பதிலடி தந்து பாஜகவில் இருந்து விலகுங்க.. தமிழிசைக்கு காங். அட்வைஸ்!
சென்னை: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கை விரலை உயர்த்தி கடுமையான முகத்துடன் கண்டித்த சம்பவத்துக்கு கேரளா காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவில் இருந்து தமிழிசை சவுந்தரராஜன் உடனே விலக வேண்டும் எனவும் கேரளா காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
தமிழக பாஜக தலைவராக இருந்தவர் தமிழிசை சவுந்தரராஜன். பின்னர் தெலுங்கான ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்தார். இந்த பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டின் தென் சென்னை தொகுதியில் தமிழிசை போட்டியிட்டார். ஆனால் இத்தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜன் தோல்வி அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைமையை (அண்ணாமலையை) வெளிப்படையாகவே தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்து வந்தார். இதற்கு அண்ணாமலை தரப்பும் பதிலடி கொடுத்து வந்தது.
இந்நிலையில் விஜயவாடாவில் இன்று ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன், விழா மேடையில் அமித்ஷா மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு வணக்கம் வைத்துவிட்டு நகர்ந்தார். ஆனால் அமித்ஷாவோ, தமிழிசையை கையை அசைத்து அழைத்தார். அப்போது, கடுமையான முகத்துடன் கை விரல்களை உயர்த்தி கண்டிப்புடன் தமிழிசையிடம் பேசினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் அல்லது சமாதானம் சொல்லும் வகையில் தமிழிசையும் அமித்ஷாவிடம் பேசினார். இந்த வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு பெண்ணை, முன்னாள் ஆளுநரை பொதுமேடையில் எப்படி அமித்ஷா பகிரங்கமாக கண்டிக்கலாம்? என்பது விமர்சனம் வைப்போரின் கருத்து. தற்போது இந்த விவகாரத்தில் கேரளா காங்கிரஸும் இணைந்துள்ளது.
கேரளா காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், பெண்களை பாஜக எப்படி இழிவாக நடத்துகிறது என்பதற்கு இதுதான் சான்று. கொஞ்சமாவது சுயமரியாதை இருந்தால் தக்க பதிலடி கொடுத்துவிட்டு பாஜகவில் இருந்து விலகியிருப்பார்கள். ஒரு மருத்துவர், முன்னாள் ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் இத்தகைய அவமானங்களை தாங்கிக் கொள்ளாக் கூடாது என தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications