முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு பாஜகவில் பதவி.. லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணனுக்கு விளையாட்டு அணி பொறுப்பு!
சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணனுக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் கௌரவ துணைத் தலைவராக லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், 1983ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றார். அந்த காலகட்டத்தில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தார்.

1987ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், அதன் பிறகு வர்ணனையாளராகச் செயல்பட்டு வந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், அவருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோரின் ஒப்புதலோடு, தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் கௌரவ துணை தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணனை நியமிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
இந்திய கிரிக்கெட்டுக்கு உங்களின் சிறப்பான பங்களிப்பும், விளையாட்டை ஊக்குவிப்பதில் உங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியது. ஒரு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரராக உங்களின் அனுபவம், தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மேற்கொள்ளும் முயற்சிகளை பெரிதும் மேம்படுத்தும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
மேலும் உங்களின் பாரம்பரியம் அடுத்த தலைமுறைகளுக்கு நிச்சயம் ஊக்கமளிக்கும். எங்களது விளையாட்டுப் பிரிவின் ஒரு அங்கமாக நீங்கள் கிடைத்ததில் பெருமை கொள்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications