குஷ்பூ பாஜகவில் இணைவது மகிழ்ச்சியே... எங்கிருந்தாலும் வாழ்க - அமைச்சர் ஜெயக்குமார்
குஷ்பு பாஜகவில் இணைவது மகிழ்ச்சிதான் அவர் எங்கிருந்தாலும் வாழ்க என்று கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
சென்னை: அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவில் குஷ்பூ இணைவது மகிழ்ச்சியே, குஷ்பூ எங்கிருந்தாலும் வாழ்க என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக பழனிசாமி ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்றும் அவர் கருத்து கூறியுள்ளார்.
நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து தனது அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் பாஜகவில் இணைய உள்ளதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியான நிலையில் குஷ்புவின் ராஜினாமா கடிதம் அதனை உறுதிபடுத்தியுள்ளது.

இந்த நிலையில் அகில இந்திய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து குஷ்பு விலகியது பெரிய நஷ்டம் எதுவும் ஏற்படாது என்று மாநில காங்கிரஸ் கட்சியினர் கருத்து கூறி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்தவரை பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த குஷ்பு கடந்த சில மாதங்களாக ரொம்பவே மென்மையாக கருத்துக்களை பதிவிட்டார். புதிய கல்வி கொள்கை தொடங்கி பாஜக தலைவர்களுக்கு வாழ்த்து கூறுவது வரைக்கும் ட்விட்டரில் பதிவிட்டு காங்கிரஸ் கட்சியினரினரிடம் வசவுகளை வாங்கிக்கட்டிக்கொண்டார்.
இந்த நிலையில் இதுநாள் வரை மனக்குமுறலில் இருந்த குஷ்பு இப்போது தீர்க்கமான முடிவு எடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இன்று பாஜகவில் இணையவுள்ளார். இதற்காகவே தனது கணவர் சுந்தர். சி உடன் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார் குஷ்பு.
குஷ்பு பாஜகவில் இணையப்போவது குறித்து கருத்து கூறியுள்ள தமிழக அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவில் குஷ்பூ இணைவது மகிழ்ச்சியே, குஷ்பூ எங்கிருந்தாலும் வாழ்க என்று தெரிவித்துள்ளார். யாராக இருந்தாலும் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக பழனிசாமிதான் அவரை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்றும் கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications